டெல்லி : மத்திய பிரதேச முதல்வர் கமல் நாத்தின் மருமகனும், தொழிலதிபருமான ரதுல் பூரி, வங்கியில் கடன் பெற்று மோசடி செய்தற்காக இன்று (ஆகஸ்ட் 20, 2019) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பல்வேறு வங்கிகளில் 354 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்த வழக்கில் இன்று ரதுல் பூரியை, அமலாக்கத் துறையினர் கைது செய்துள்ளனர்.
ரதுல் பூரி இயக்குனராக இருக்கும் மோசர் பேயர் நிறுவனம் (Moser Baer India Limited) கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து பல்வேறு வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்துள்ளதாக வழக்கு போடப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் 4 பேரும் போலியான ஆவணங்கள் மூலம் 354.51 கோடி ரூபாயை கடன் பெற்று மோசடி செய்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக மோசர் பேயர் நிறுவனத்துக்கு சொந்தமான 6 இடங்களில் கடந்த திங்கட்கிழமையன்று சிபிஐ திடீரென ரெய்டு நடத்தியது.
இந்த சூழலியே அமலாக்கப்பிரிவினர் ரதுல் பூரியை கைது செய்துள்ளனர். ரதுல் பூரிக்கு எதிராக வங்கி மோசடி மட்டுமல்லாமல், அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஹெலிகாப்டர் வழக்கிலும் அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது மட்டும் அல்லாது தொழிலதிபரான ரதுல் பூரி, இந்துஸ்தான் பவர்புராஜக்ட்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனமும் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக அந்த நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 1,350 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பும் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்ததுள்ளது.
இதைத் தொடர்ந்து டெல்லியில் பினாமி பெயரில் வாங்கப்பட்டிருந்த, ரதுல் பூரியின் வீட்டையும் வருமான வரித்துறை முடக்கி உள்ளது. இது தவிர மொரீசியசை சேர்ந்த நிறுவனம் ஒன்றிடம் இருந்து பெற்று வைத்திருந்த அன்னிய நேரடி முதலீட்டு தொகை சுமார் 284 கோடி ரூபாயும் முடக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
பினாமி சொத்து பரிமாற்ற சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறும் வருமான வரித்துறை அதிகாரிகள், இந்த முறைகேடு தொடர்பாக ரதுல் பூரியின் தந்தையும், கமல்நாத்தின் மைத்துனருமான தீபக் புரி மீதும் விசாரணை நடத்தி வருகிறதாம்.