பஞ்சாப் நேஷனல் பேங்க் புகழ் நீரவ் மோடி என்றால், பஞ்சாப் & மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கிக்கு புகழ் சேர்த்தவர்கள் நம் Housing Development and Infrastructure Ltd (HDIL)என்கிற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் புரோமோட்டர்களாக ராகேஷ் மற்றும் சராங் வாதவான் தான்.
இவர்கள் இருவரும் சமீபத்தில் தான் மும்பை காவல் துறையினர், பொருளாதார குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் பஞ்சாப் & மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் சுமார் 2,500 கோடி ரூபாய் கடன் வாங்கி அதை ஒழுங்காகத் திருப்பிச் செலுத்தாமல், வங்கி அதிகாரிகளை கூட்டு சேர்த்துக் கொண்டு ஆர்பிஐ-க்கே அல்வா கொடுத்து இருக்கிறார்கள். இந்த நிதி மோசடிகளுக்காகத் தான், இருவரும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
ராகேஷ் வாதவான் செயல் தலைவராகவும், அவரது மகன் சாரங் வாதவான் நிர்வாக இயக்குநராகவும் மேலே சொன்ன நிறுவனத்தின் பதவியில் இருக்கிறார்கள். பொருளாதார குற்றப் பிரிவினர் தரப்பில், Housing Development and Infrastructure Ltd (HDIL) நிறுவனம் பஞ்சாப் அண்ட் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் இருக்கும் சுமார் 70 சதவிகித டெபாசிட்டர்களின் பணத்தை வாங்கி இருக்கிறார்கள். அதை மறைக்க சுமார் 21,000 போலி வங்கிக் கணக்குகளைத் தொடங்கி ஏமாற்றி இருக்கிறார்கள். மோசடி செய்த தொகை பெரியது என்பதால், Housing Development and Infrastructure Ltd (HDIL) நிறுவனத்தின் செயல் தலைவர் ராகேஷ் வாதவான் மற்றும் நிர்வாக இயக்குநர் சாரங் வாதவான் ஆகியோரிடம் விரிவான விசாரணை தேவை எனச் சொல்லி கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டார்கள்.
வாதவான் தரப்பிலோ அமித் தேசாய் என்பவர் ஆஜராகி வாதாடி இருக்கிறார். "Housing Development and Infrastructure Ltd (HDIL) சார்பில் வாங்கி இருக்கும் கடனுக்கு சுமார் 49 நில வங்கிகள், சுமார் 150 கோடி ரூபாய் மதிப்பிலான ஃபிக்ஸட் டெபாசிட்டுகள் என எல்லாமே வங்கியிடம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதோடு Housing Development and Infrastructure Ltd (HDIL) சார்ந்த கணக்கு வழக்குகள், பதிவுகள், டாக்குமென்ட்கள் என எல்லாமே இருக்கிறது. இது ஒன்றும் தீவிரவாதம் அல்ல. எனவே பொருளாதார குற்றப் பிரிவினர் கஸ்டடியில் எடுத்து விசாரிக்கத் தேவை இல்லை" என அவரும் கார சாரமாக விவாதித்து இருக்கிறார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மும்பை சிறப்பு பொருளாதார குற்றங்களுக்கான நீதிமன்றம் ராகேஷ் வாதவான் மற்றும் சாரங் வாதவான் ஆகிய இருவரையும், அக்டோபர் 09, 2019 வரை கஸ்டடியில் வைத்து விசாரிக்க அனுமதி கொடுத்து இருக்கிறது.