பிஎம்சி வங்கியில் நடைபெற்ற மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட ஹெச்டிஐஎல் கட்டுமான நிறுவனத்தின் தலைவரான ராகேஷ் வாத்வான் மற்றும் அவரது மகன் சாரங் வாத்வான் காவல் துறை கட்டுபாட்டில் உள்ளனர்.
இந்த நிலையில் இவர்கள் ரிசர்வ் வங்கிக்கு எழுதியுள்ள கடிதத்தில், பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் எங்களுடைய 18 சொத்துக்களை விற்று கடனை அடைத்து விடுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளாதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
மும்பை காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவு அறிக்கையின் படி, பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் 4,355 கோடி ரூபாய் மோசடி நடத்திருப்பதாகவும், இதில் சுமார் 70 சதவிகிதத்துக்கு மேல் ஹெச்டிஐஎல் நிறுவனம் மோசடி செய்து பெற்றுள்ளது என்றும் கூறப்படுகிறது.
பொருளாதாரக் குற்றப்பிரிவு தரப்பில் நடத்திய விசாரணையின் போது ரோல்ஸ் ராய்ஸ், பிஎம்டபிள்யூ, உள்ளிட்ட 15 சொகுசுக் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இது தவிர இரு விமானங்களும், எலெக்ட்ரிக் கார்கள் மற்றும் படகுகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டதாகவும், மேலும் பல இடங்களில் நிலங்களும் கையகப்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் கையகப்பட்ட அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மொத்த மதிப்பு 3,830 கோடி ரூபாயாக மதிப்பிட்டப்பட்டுள்ளது. இவை தவிர மும்பையிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பல்வேறு வில்லங்கம் இல்லாத சொத்துக்களும் உள்ளன என்றும் கூறப்படுகிறது.
பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்திருப்பது கடந்த மாதம் வெளிச்சத்துக்கு வந்த நிலையில், ஆர்பிஐ அந்த வங்கியை அடுத்த ஆறு மாதங்களுக்கு தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
ரிசர்வ் வங்கி கடன் வழங்குவதற்கு நிர்ணயித்துள்ள வரம்பை மீறி, அதிகப்படியான கடன்களை வாரி வழங்கியுள்ளதாகவும், இதற்காக இவ்வங்கி 21,000 போலி கணக்குகளை உருவாக்கி அவற்றின் மீது கடன்களைக் கொடுத்துள்ளது என்றும், அதிலும் சில இறந்தவர்களின் பெயரில் உள்ள கணக்குகளின் மூலம் தில்லு முல்லு நடந்ததாகவும் கூறப்படுகிறது
இதில் கவனிக்க தக்க விஷயம் என்னவெனில் அந்த வங்கியின் முன்னாள் அதிகாரிகள் வர்யாம் சிங் மற்றும் ஜாய் தாமஸ் உள்ளிட்டோரும் உடந்தையாக இருந்துள்ளனர் என்றும் கூறப்பட்டது.