இந்திய வங்கிகளில் நாளுக்கு நாள் வங்கி கடன் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில் அனைத்து வங்கிகளும் கடன் வழங்குவதில் குறிப்பாக அதிகத் தொகைக்குக் கடன் வழங்குவதில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் ரிச்ர்வ் வங்கியும் கடன் மற்றும் இதர வங்கி நிர்வாகம் குறித்துத் தொடர்ந்து ஆய்வு செய்து சந்தேகக்கிகப்படும் வங்கிகளைக் கண்காணிப்பில் வைக்கிறது.
இந்நிலையில் 2022ஆம் நிதியாண்டின் டிசம்பர் வரையிலான 9 மாதம் வரையில் எந்த வங்கியில் அதிகப்படியான வங்கி மோசடிகள் பதிவாகியுள்ளது என்பதற்கான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
27 வங்கி, நிதி நிறுவனங்கள்
இந்தியாவில் இருக்கும் 27 வணிக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் 2022ஆம் நிதியாண்டில் டிசம்பருடன் முடிவடைந்த ஒன்பது மாதங்களில் மொத்தம் 34,097 கோடி ரூபாய் மதிப்பிலான வங்கி மோசடிகள் நடந்துள்ளது. இதற்காகச் சுமார் 96 மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளது.
ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, இந்த 9 மாத காலகட்டத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகபட்சமாக ரூ.4,820 கோடி ரூபாய் மதிப்பிலான மோசடிகளைப் பதிவு செய்திருந்தாலும், பேங்க் ஆஃப் இந்தியா அதிகபட்சமாக 13 மோசடி வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.
பகவத் காரத்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்து நிதித்துறை இணை அமைச்சர் பகவத் காரத், வங்கி வாரியாக ரூ.100 கோடிக்கு மேல் நடந்த மோசடி விவரங்களைத் தெரிவித்தார். இதில் மதிப்பீட்டின் படி பஞ்சாப் நேஷனல் வங்கியும், வழக்குகள் படி பேங்க் ஆஃப் இந்தியா அதிகப்படியான மோசடிகளைப் பதிவு செய்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி
மத்திய அமைச்சர் பகவத் காரத் வெளியிட்டுள்ள தரவுகள் படி பஞ்சாப் நேஷனல் வங்கி 10 வழக்குகள் கீழ் 4820 கோடி ரூபாயும், பேங்க் ஆப் இந்தியா 13 வழக்குகள் கீழ் 3925 கோடி ரூபாயும், யெஸ் வங்கி 11 வழக்குகள் கீழ் 3869 கோடி ரூபாயும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா 8 வழக்குகள் கீழ் 3902 கோடி ரூபாயும், கனரா வங்கி 5 வழக்குகள் கீழ் 2658 கோடி ரூபாய் அளவிலான மோசடிகள் பதிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications