கடந்த சில தினங்களாகவே மிகவும் பரபரப்பான விஷயங்களில் ஒன்றாக பேசப்படும் விஷயங்களில் ஒன்று யெஸ் பேங்க். நிதி நெருக்கடி என பல காரணங்களினால் யெஸ் பேங்கினை தனது கட்டுப்பாடின் கீழ் கொண்டு வந்தது ஆர்பிஐ.
மேலும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருந்தாலும், மக்கள் நலன் கருதி யெஸ் பேங்க் மீட்கப்படுவதற்கான பல திட்டங்கள் இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தித்திருந்தது.
இந்த நிலையில் யெஸ் பேங்கின் 49% பங்கினை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவும், எல்ஐசியும் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகின.
எஸ்பிஐ முதலீடு
இந்த நிலையில் பலத்த நிதி நெருக்கடியின் கீழ் தத்தளித்து வரும் யெஸ் பேங்கில் 10,000 கோடி ரூபாய் வரையில் முதலீடு செய்யப்படும் என்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் தலைவர் ரஜ்னிஷ் குமார் தெரிவித்துள்ளார். மேலும் யெஸ் பேங்கினை தனது கட்டுப்பாட்டின் கீழ் ஆர்பிஐ கொண்டு வந்துள்ளது. ஆக இனி அங்கு பணி புரியும் ஊழியர்களுக்கு என்ன செய்யப்போகிறது. வைப்பு நிதியாளர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்ற பல கேள்விகள் எழுந்தன.
கவலை வேண்டாம்
ஆனால் இதற்கும் பதலளிக்கும் விதமாக யெஸ் பேங்கின் சம்பளம் உள்ளிட்ட விகிதங்களில் மாற்றம் இருக்காது என எஸ்பிஐ தெரிவித்துள்ளது. அதாவது குறைந்தபட்சம் ஒரு ஆண்டுக்கு இதனை பற்றி கவலை பட வேண்டியது இல்லை. ஏனெனில் சம்பளம் உள்ளிட்ட பல சேவை நிபந்தனைகளில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
49% பங்குகளை வாங்கலாம்
எனினும் முக்கிய மேலாண்மை குறித்த முடிவுகளை போர்டு தான் முடிவெடுக்கும். வரைவு மறுகட்டுமான திட்டத்தின் படி (draft scheme of reconstruction) வங்கியின் அதிகாரப்பூர்வ மூலதனம் 5,000 கோடி ரூபாயாகும். இதில் ஒரு பங்கின் விலை 2 ரூபாயாகும். ஆக மொத்தத்தில் எஸ்பிஐ 49% பங்குகளை வாங்கலாம் என்றும் கூறப்படுகிறது.
எஸ்பிஐ உறுதி
எனினும் எஸ்பிஐ தலைவர் ரஜ்னிஷ் குமார் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், யெஸ் பேங்கில் 49% பங்குகளை வாங்க முடிவு செய்துள்ளோம். குறைந்தபட்சம் 26% பங்குகளையாவது வாங்குவோம். எனினும் உறுதியாக எவ்வளவு பங்குகள் என்பது வாரியக் கூட்டத்துக்கு பின்பு தான் தெரியவரும். எவ்வாறயினும் 2,450 கோடி ரூபாய் உடனடியாக யெஸ் பேங்கில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம் என்று கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
முடிவு பின்னர் எடுக்கப்படலாம்
மேலும் தேவை மற்றும் அதன் நிலையை கருத்தில் கொண்டு முதலீடுகள் அதிகரிக்கப்படலாம் என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த திட்டம் குறித்த பரிந்துரைகள் மற்றும் கருத்துகளை ரிசர்வ் வங்கிக்கு 2020ம் ஆண்டு மார்ச் 9க்குள் வழங்க வேண்டும். அதன் பிறகு மத்திய வங்கி இறுதி முடிவு எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
சாத்தியமான முதலீட்டினை செய்வோம்
மேலும் இந்த புனரமைப்பு திட்டத்தினை கண்டு பல முதலீட்டாளர்கள் எஸ்பிஐ அணுகியதாகவும், இவை அனைத்தும் ஆரம்ப விவாதங்கள். எங்கள் முதலீட்டு குழு அவர்களுடன் கலந்துரையாடி சாத்தியங்கள் என்னவோ அதனை உருவாக்கும் என்றும் கூறியுள்ளார். ஆனால் நிச்சயம் யெஸ் பேங்கில் முதலீடு செய்வோம் என்றும் கூறியுள்ளார்.
சோதனை எந்த விதத்திலும் பாதிக்காது
எனினும் யெஸ் பேங்கின் நிறுவனம் ரானா கபூர் வீட்டினை அமலாக்கதுறை மூலம் அவரது வீட்டில் சோதனை நடைபெற்றது எதுவும், இந்த மறுசீரமைப்பு திட்டத்தில் எதிரொலிக்காது என்றும் குமார் கூறியுள்ளார். யெஸ் பேங்க் ஒரு நிறுவனம். ஆனால் ரானா கபூர் என்பவர் ஒரு தனி நபர். ஒரு தனி நபர் குற்றம் செய்திருந்தால், அதற்கான விலையை அவர்கள் கொடுப்பார்கள். ஆனால் நிறுவனம் ஏன் பாதிக்கப்பட வேண்டும் என்றும் குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் வைப்பு நிதி வைத்திருப்பவர்களின் பணம் பாதுகாப்பாக உள்ளது எனவும் உறுதியளித்துள்ளார்.