Recommended Video
சென்னை: காலங்கள் மாறிக் கொண்டிருக்கும் இந்த நிலையில், அதற்கேற்றவாறு உணவு பழக்க பழக்க வழக்கங்களும் மாறிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், ஆந்திராவில் இருந்து வந்து, தமிழே தெரியாத ஒருவர் சென்னையில் வந்த கடை வைத்து, தற்போது 43 வருடங்களாக பிரபலமாக நடந்து கொண்டிருக்கிறது என்றால் பொய்யில்லை.
நாம் வழக்கமாக கூறும் ஒன்று தான். சிறுதொழில் என்றாலே அதில் பல வகையான போட்டிகளும், புது புது யுக்திகளும் கையாண்டால் மட்டுமே ஜெயிக்க முடியும் என்ற நிலையில், 43 வருடங்களாக, இந்த யுக்தியை கையாண்டு ஜெயித்துக் கொண்டிருக்கும் சீனா பாய் கடைக்கு ஒரு சல்யூட் அடித்தே ஆக வேண்டும்.
சீனா பாயும் அவரது மனைவி சத்யவதியும் ஆரம்பித்த கடை என்றாலும், அவர்கள் இல்லாத காலத்திலும் அவரது மகன்கள் நான்கு பேரும் சென்னையில் சீனா பாய் என்ற பெயரில் வெற்றிகரமாக கடை வைத்து நடத்தி வருகின்றனர்.
இவை எல்லா இடங்களிலும் கிடைக்குமே?
ஆமாங்கா.. சீனா பாய்க்கு 4 மகன்கள் மற்றும் ஒரு மகள், ஆனால் தற்போது 4 பேரும் தனித்தனியாக வேறு வேறு இடங்களில் கடை வைத்து நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நாம் பேசியது கடைகுட்டி சந்தான கிருஷ்ணனிடம் தான். இது குறித்து அவர் கூறுகையில், பொதுவாக இட்லி தோசை, ஊத்தாப்பம் என்றாலே, அனைத்து இடங்களிலும் கிடைக்கும், ஆனால் ஒரே வகை உணவு என்றாலும் அப்படி என்ன ஸ்பெஷல் சீனா பாய் கடையில். எப்படி இவ்வளவு கூட்டம் வருகிறது என்றால், அது எங்களின் தரமும் ருசியும் தான் காரணம் என்கிறார்.
சீனா பாய் கடை
சென்னையில் உள்ள சௌகார்பேட்டை பகுதியில் இருக்கும், இந்த கடைக்கு செல்வது சற்று கடினம் தான் என்றாலும், கூட்டம் அலை மோதுகிறது இங்கு. மற்ற கடைகளுடன் ஒப்பிடும்போது இங்கு சுகாதாரமான முறையில் உணவு கிடைக்கிறது என்பது ஒன்றாக இருந்தாலும், விலை குறைவான ருசிகராமான உணவு சென்னையில் கிடைப்பது கடினம் தானே. அதிலும் இப்பகுதியில் வட இந்தியர்கள் அதிகம் வாழ்வதல் பானி பூரி, மசால் பூரி, லஸ்ஸி, சப்பாத்தி என பல வகைகள் இருந்தாலும், அவற்றை சாப்பிட்ட மக்களுக்கு, சௌகார்பேட்டை பகுதியில் உள்ள சீனா பாய் கடை என்றாலே அது பிரபலம் தான். 1976ம் ஆண்டிலிருந்து இந்தக் கடையை தள்ளுவண்டியில், சந்தான கிருஷ்ணனின் பெற்றோர்கள் ஆரம்பித்தனராம். ஆனால் தற்போது அவர்களுக்கு பின்னர் அவர்களின் வாரிசுகள் எடுத்து நடத்த ஆரம்பித்துள்ளனர். அதிலும் கடந்த 1991 முதல் கடையை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகின்றேன் என்று கூறுகிறார் கிருண்னன்.
எங்களின் ரகசியமே பொடிதான்
அப்படி என்ன ஸ்பெஷல் சீனா பாய் கடையில்? சுட சுட சிறிய அளவிலான இட்லியும், அதில் ஊற்றப்படும் நெய்யும், மேலே தூவப்படும் இட்லியும், இதற்காக கொடுக்கப்படும் புதினா சட்னியும், கொத்தமல்லி சட்னியும், யப்பா, ருசியே ருசி தான். அடுத்தாற்போல் கையளவிலான ஊத்தாப்பமும், அதன் மேல் தூவப்படும் பொடியும், இதற்கு மேல் ஊற்றப்படும் நெய்யும் அமிர்தமே அமிர்தம் என்று தான் சொல்ல வேண்டும். இதை பார்க்கும் போதே நா ஊறுகிறது சப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது இல்லையா. இது தான் எங்களின் தொழில் ரகசியம் என்கிறார் சந்தான கிருஷ்ணன்.
ருசிகரமான ரகசிய பொடி?
ருசிகரமான இந்த ரகசிய பொடியை வீட்டில் உள்ள பெண்கள் சமைத்து எடுத்து வருவதோடு, இந்த அருமையான சட்னிகளும் கையால் செய்யப்படுபவை. அதிலும் எங்கள் கடை இந்த அளவுக்கு மிகப்பிரபலமாக இந்த ரகசிய பொடியும், காரமாண சட்னியும் ஒரு காரணம் என்றும் கூறுகிறார். சரி அப்படி என்ன இந்த பொடியும் கலந்து இருக்கிறீர்கள் என்றால் அது வியாபார யுக்தி வெளியில் சொல்லக்கூடாது என்கிறார் சிரிப்புடன்.
கடை வாடகை தான்
பல வருடங்களாக இங்கு கடை வைத்து நடத்திக் கொண்டிருக்கும் கிருஷ்ணன், தற்போது வரை வாடகைக்கு கடை எடுத்து தான் நடத்தி வருகிறார். கிருஷ்ணனோடு சேர்த்து இரண்டு மூன்று பேர் கொண்டு நடத்தி வரும் கடை, மாலை 6 மணிக்கு மேல், இரவு 11.30 மணி வரை இருக்கும். அதிலும் மாலை 6 மணி என்றாலே இங்கு களைகட்டி விடுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். ஒரு நிமிடம் கூட நிற்க நேரமில்லாமல் வேலை செய்து வரும் இவர்களின் மொத்த வேலையும் மாலை ஆறு மணிக்கு ஆரம்பித்து, இரவு 11.30 மணிக்கு எல்லாம் முடிந்துவிடும்.
வருமானம் எப்படி?
வருமானம் இல்லை என்று கூறி விட முடியாது. கடை வாடகை போக, ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் மூலதன பொருட்களின் செலவு போக ஓரளவு வருமானம் வருகின்றது. எங்களது குடும்பமே இதனை நம்பித்தான் இருக்கிறது. ஆக குடும்பத்தை நல்ல முறையில் கொண்டு செல்லும் அளவுக்கு வருமானம் இருக்கிறது என்று கூறுகிறார் கிருஷ்ணன். எனினும் மற்ற பகுதிகளை காட்டிலும் அனைத்து வகையிலும் செலவினங்கள், இங்கு அதிகம். ஏன் தண்ணீர் முதல் கொண்டு நாம் காசு கொடுத்து வாங்க வேண்டியுள்ள நிலையில் இருக்கிறோம் என்றால் வருமானம் எந்த அளவுக்கு இருக்கும் என்று நீங்களே பாருங்கள் என்றும் கூறுகிறார்.
மக்களுக்கு பிடித்தவாறு உணவளிக்க வேண்டும்?
பொதுவாக வந்தாரை வாழவைக்கும் சென்னை என்பார்கள். அது எங்கள் வகையில் மிக உண்மை தான். ஏனெனில் இன்றளவிலும் எங்களது பழைய வாடிக்கையாளர்கள் தான் அதிகம் வருகின்றனர். இருப்பினும் காலத்திற்கு ஏற்றாற்போலவும், நம் இளைஞர்களுக்கு ஏற்றாற்போலவும் இரவு டிபன் வகைகளை மாற்றம் செய்தும் தருகிறோம். எனினும் இங்கு அதிகளவில் இன்றளவிலும் விற்பனையாவது பொடி இட்டிலியும், எங்களது ஸ்பெஷல் ஊத்தாப்பாமுமே என்றும் கூறுகிறார்.
கடைக்கு விளம்பரம் எப்படி?
எங்களது கடைக்கு என்று தனியாக நாங்கள் விளம்பரம் தருவதில்லை. ஏனெனில் மக்களே எங்களது விளம்பரதாரர்கள் என்றும் கூறும் கிருஷ்ணன். இதுவரை கடைக்கு என்று எந்த விளம்பரமும் செய்ததில்லையாம். இங்கு வந்து சாப்பிடும் மக்கள் அதை மற்றவர்களிடம் கூறுவது தான் எங்களுக்கு விளம்பரம் என்றும் கூறுகிறார். அதிலும் அண்ணன் படித்தது எட்டாம் வகுப்பு வரை என்றாலும், எந்த யூடியூப் சேனல்களிலும் இவரை பார்க்க முடியும். பல செய்தித்தாள்கள், புத்தகங்கள் என அனைத்திலும் கலக்கும் இவர், சில விருதுகளையும் வாங்கியுள்ளார். ஆமாங்க.. பிரபல நிறுவனங்கள் அளித்துள்ள விருதுகளையும் வாங்கியுள்ளார் என்றால் பாருங்களேன்.
இது தான் வியாபார யுக்தி?
முதலில் கடைக்கு வரும் அனைவரிடமும் கலகலவென சிரித்த முகத்துடன் பேசுவதே ஒரு கலை தான். அதிலும் இவரின் கடைக்கு இளைஞர் கூட்டம் அதிகம் வருகிறது எனில் அதற்கு இவரின் அணுகுமுறையும் ஒரு காரணம் என்று தான் கூறவேண்டும். மேலும் நம்ம தொழிலின் மேல் நமக்கு ஒரு பயம் வேண்டும். ஆமாங்க.. ஏதாவது தவறாக பேசிவிட்டால் வாடிக்கையாளர்கள் அடுத்த முறை வர யோசிப்பார்கள். மேலும் உணவு ருசியும் தரமும் குறைந்து விட்டால் மக்கள் வருவது குறைந்து விடும் என்ற பயத்திலேயே நல்ல முறையில் செய்வோம். அந்த பயம் இல்லாவிட்டால், எங்களால் நல்ல முறையில் மக்களுக்கு சேவை செய்ய முடியாது. ஆக இந்த பயம் இந்த தொழில் மட்டும் அல்ல, எந்த தொழிலாக இருந்தாலும், அதில் பயம் இருக்க வேண்டும். அது இருந்தால் மட்டுமே நாம் சரியாக நமது வேலைகளை செய்வோம். ஏனெனில் வாடிக்கையாளர்கள் தான் நமக்கு முக்கியம். அன்று எங்களது பெற்றோர்கள் சொன்ன அஸ்திரமும் இது தான் என்றும் கூறுகிறார் கிருண்னன்.