ஆதார் கார்டு இணைப்பு குறித்த முக்கியத் தீர்ப்பினை மத்திய அரசு மத்திய அரசு புதன்கிழமை அளித்தது. அதில் ஆதார் ஒரு சரியான ஆவணம் தான் என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டு இருந்த போதிலும் மொபைல் எண் மற்றும் வங்கி கணக்கில் ஆதார் இணைப்பினை கட்டாயம் ஆக்க கூடாது என்று தெரிவித்துள்ளது.
இது மொபைல் எண் மற்றும் வங்கி கணக்குடன் இதுவரை ஆதார் கார்டினை இணைக்காதவர்களுக்கு முக்கியத் தீர்ப்பாக இருக்கும். ஆனால் ஏற்கனவே ஆதார் எண்ணுடன் இணைப்பினை செய்தவர்கள் அதனைத் துண்டிப்பது எப்படி?
டெலிகாம் மற்றும் மொபைல் நிறுவனங்கள்
வரும் நாட்களில் வங்கிகள் மற்றும் டெலிகாம் நிறுவனங்கள் ஆதார் எண் இணைப்பினை துண்டிப்பதற்கான வழிமுறைகளைச் செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான சரியான வழிமுறைகளை இவர்கள் கொண்டு வர வேண்டும் என்பது இந்த இணைப்பினை எதிர்க்கும் பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஆதார் சட்டம்
ஆதார் சட்டத்தின் படி இது போன்ற சேவைகளில் இணைப்பினை செய்வதைப் போன்றே அதனைத் துண்டித்துவிட்டு அல்லது நீக்கிவிட்டு வெளியேறுவதற்கான பிரிவுகளும் உள்ளன.
இடைப்பட்ட காலத்தில் இணைப்பில் இருந்து வெளியேறுவது எப்படி?
இடைப்பட்ட காலத்தில் ஆதார் இணைப்பில் இருந்து வெளியேற நினைப்பவர்கள் வங்கி மற்றும் டெலிகாம் நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் சேவை மையத்தினைத் தொடர்புக்கொன்று இணைப்பினை நீக்க கோரிக்கை வைக்கலாம்.
வங்கி கணக்கில் இருந்து நீக்க வங்கி கிளைகளை அணுகி கடிதம் அளிப்பதன் மூலமும் இணைப்பினை துண்டிக்கலாம்.
உஷார்
ஆனால் வங்கி கணக்கில் இருந்து ஆதார் இணைப்பினை நீக்குவதில் சில சிக்கல் உள்ளது. அரசு நல திட்டங்கள், எரிவாயு மானியம் போன்றவை வங்கி கணக்கிற்கு ஆதார் மூலம் தான் அனுப்பப்படுகிறது. எனவே வங்கி கணக்கில் இருந்து ஆதார் இணைப்பினை துண்டிக்க வேண்டும் என்றால் இந்த மானியங்களைப் பெற முடியாமல் போகவும் வாய்ப்புகள் உள்ளது.
தீர்ப்பிலிருந்து கவணிக்க வேண்டியவை?
அதே நேரம் உச்ச நீதிமன்றம் ஆதார் இணைப்பு தரவுகளைத் தனியார் நிறுவனங்கள் 6 மாதத்தில் நீக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பின் போது குறிப்பிட்டுள்ளனர்.
கூகுள் பே / யூபிஐ
வங்கி கணக்கில் இருந்து ஆதார் எண்ணை நீக்கிவிட்டால் கூகுள் பே / யூபிஐ போன்ற செயலிகளில் பணபரிமாற்றம் செய்வதிலும் சிக்கல் ஏற்படும் என்று கூறுகின்றனர்.
ஆதார் கார்டு வாங்கலாமா, வேண்டாமா?
இதனைப் பார்க்கும் போது ஆதார் கார்டு வாங்க வேண்டாம் என்று விட்டு விட வேண்டாம். அரசு மானியங்கள் மற்றும் பிற நலத்திட்டங்கள் பெற ஆதார் கட்டாயம் ஆகும். பான் கார்டு இருந்தால் தான் வங்கி கணக்கை திறக்க முடியும். ஆனால் பான் கார்டு வாங்க ஆதார் கட்டாயம். அதே போன்று வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்றாலும் ஆதார் தேவை. எனவே ஆதார் கார்டினை வாக்காளர் அடையாள அட்டை போன்று வாங்கி வைத்துக்கொண்டு தேவைப்படும் போது பயன்படுத்திக்கொள்வது நல்லது என்பதே தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்தின் கருத்தாகும்.