என்டிடிவி மற்றும் தனியார் கருத்துக் கணிப்பு அமைப்பான Ipsos ஆகியவை இணைந்து நடத்திய சர்வேயில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.
ஊழல், வேலைவாய்ப்பின்மை, ஏழ்மை, தீவிரவாதம்/நக்ஸலிசம், விலைவாசி உயர்வு ஆகியவற்றில் நாட்டின் மிக முக்கிய பிரச்சனை எது என்ற கேள்விக்கு பெரும்பாலானோர் ஊழல் தான் என்று பதிலளித்துள்ளனர்.
காங்கிரஸ், பாஜக ஆகியவற்றில் அதிக ஊழல் செய்யும் கட்சி எது என்ற கேள்விக்கு இரு கட்சிகளும் கிட்டத்தட்ட சரிசமமான அளவில் மக்கள் 'ஆதரவைப்' பெற்றுள்ளன. காங்கிரஸ் தான் ஊழல் கட்சி என்று 54 சதவீதத்தினரும், பாஜக தான் என்று 46 சதவீதத்தினரும் கூறியுள்ளனர். இதன்மூலம் எந்தக் கட்சியும் ஒழுங்கில்லை என்றே மக்கள் பதில் தந்துள்ளனர்.
ராஜஸ்தான், ஒடிஸ்ஸா, மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் தான் ஊழல் கட்சி என்று 70%, 60%, 59% சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
கர்நாடகத்தில் பாஜக தான் மாபெரும் ஊழல் கட்சி என்று 58% பேர் கூறியுள்ளனர்.
நீங்கள் லஞ்சம் கொடுத்திருக்கிறீர்களா என்ற கேள்விக்கு ஆந்திராவில் 54% பேரும், சட்டீஸ்கரில் 49% பேரும், கர்நாடகத்தில் 47% பேரும், தமிழகத்தில் 41% பேரும், பிகாரில் 35% பேரும் ஆமாம் என்று பதிலளித்துள்ளனர்.
தேசிய அளவில் 4ல் ஒருவர் லஞ்சம் கொடுத்துள்ளதாகக் கூறியுள்ளனர். அதாவது மக்கள் தொகையில் 25 சதவீதம் பேர், சுமார் 30 கோடி பேர், ஏதாவது காரணத்துக்காக லஞ்சம் கொடுத்துள்ளனர்.