இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஜெட் ஏர்வெஸ் நிறுவனத்துக்கும் கோடிக் கணக்கில் கடன் கொடுத்திருக்கிறது. அந்த கடனை மீட்பதற்கு முன்பே, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் 15 சதவிகித பங்குகளை கைப்பற்றிக் கொள்ளத் தயாராக இருக்கிறது.
ஜெட் ஏர்வேஸ்
1992-ல் தொடங்கப்பட்ட ஜெட் ஏர்வேஸ் தான் இன்றைய தேதிக்கு இந்தியாவின் மிகப் பெரிய முழு சேவைகளை வழங்கக் கூடிய நிறுவனம். ஆங்கிலத்தில் Full service Airline என்பார்கள். அதாவது, விமானப் பயணிகளுக்கு சாப்பிட உணவு, மது பானங்கள் தொடங்கி, உட்காரும் இருக்கைகள் வரை எல்லாம் கொஞ்சம் சொகுசாக இருக்கும். எல்லாம் வாடிக்கையாளர் சேவைகளும் இருக்கும்.
பங்குகள்
இப்போதைக்கு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் 51 சதவிகித பங்குகளை நிறுவனர் மற்றும் தலைவர் நரேஷ் கோயல் வைத்திருக்கிறார். அடுத்த 24 சதவிகித பங்குகளை இதிஹாட் ஏர்வேஸ் நிறுவனம் வைத்திருக்கிறார்கள். மீதமுள்ள 25 சதவிகித பங்குகள் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகமாகி வருகின்றன.
எஸ்பிஐ பிடி
தற்போது நரேஷ் கோயலிடம் இருக்கும் 51 சதவிகித பங்குகளில் இருந்து தான் எஸ்பிஐ தன் 15 சதவிகித பங்குகளை கைப்பற்ற இருக்கிறதாம். இனி எஸ்பிஐ வங்கி சார்பில், எப்போதும் ஒரு இயக்குநர் ஜெட் ஏர்வேல் இயக்குநர் குழுவில் இடம் பிடிக்க வாய்ப்பிருக்கிறதாம். கடந்த 11 ஆண்டுகளில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் இரண்டு ஆண்டுகளில் மட்டும் தான் லாபம் பார்த்ததாம் மீதமுள்ள ஒன்பது ஆண்டுகளும் நஷ்டத்தில் தான் இயங்குகிறதாம்.
இதிஹாட் திட்டம்
இதிஹாட் ஏர்வேஸ் நிறுவனமும் நரேஷ் கோயலில் மீதமுள்ள பங்குகளில் சுமார் 15 - 20 சதவிகிதத்தை வாங்கி தனக்கு சாதகமாக நிறுவனத்தை நடத்த எண்ணிக் கொண்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
எது எப்படியோ ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக்கு தன் கடனுக்கு கிட்டதட்ட நிகரான தொகை கிடைத்துவிட்டது என கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்களாம். ஒரே அடியாக கொடுத்த கடன் பணம் போவதற்கு பதிலாக கொஞ்சமாவது திருப்பி வாங்க முடிந்ததே என்பது தான் வங்கி அதிகாரிகள் பெருமூச்சுக்குக் காரணமாம்.