வாஷிங்டன்: இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை பணியாளர்களுக்கு அதிகம் பயனளித்து வந்த எச்-4 விசாவை முடக்குவதற்கு டொனால்ட் ட்ரம்ப் கொண்டுவரும் திட்டத்தை எதிர்த்து இரண்டு எம்பிக்கள் அமெரிக்க பார்லிமெண்டில் தீர்மானம் கொண்டுவந்துள்ளனர்.
எச்-4 விசா திட்டத்தை முடக்கினால் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்படுவார்கள். அதோடு எச்-4 விசாவில் வரும் அனைவருமே அதிக திறமை பெற்றவர்களாக இருப்பதோடு, அதிக கல்வித் தகுதியும் உடையவர்களாக உள்ளனர். எனவே அவர்களின் சேவையை நாம் இழந்துவிடக்கூடாது என்றும் அந்த எம்பிக்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.
தகவல் தொழில்நுட்பத்துறையில் உள்ளவர்கள் அமெரிக்கா சென்று வேலை பார்ப்பதற்காக வழங்கப்படுவது எச்-1பி விசா. உலகம் முழுவதும் உள்ளவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தாலும், இந்தியர்கள் தான் அதிக அளவில் இதனால் பயனடைந்து வந்தனர். அதிலும் குறிப்பாக அதிபராக ஒபாமா இருந்த காலகட்டத்தில் தான் அதிக அளவில் எச்-1பி விசா வழங்கப்பட்டு வந்தது.
எல்லா நாடுகளிலும் அரசியல் வாதிகள் ஒரே ஜாதியாகத் தான் இருப்பார்கள் போல. இந்த விசயத்தில் அமெரிக்காவும் அப்படித்தான் நடந்துகொள்கிறதோ என்று நினைக்கத் தோன்றகிறது. அங்கே ஜனநாயகக் கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்தியாவுக்கு எப்போதுமே சாதகமாக நடந்துகொள்வார்கள். (ஒருவேளை இந்தியாவும் ஜனநாயக நாடாக இருப்பதாலோ என்னவோ). இதற்கு மாறாக குடியரசுக் கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கு நேர் மாறாகவே நடந்துகொள்கிறார்கள். எச்-1பி விசாவிலும் அந்தக் கூத்து தான் நடக்கிறது.
எச்-1பி விசாவில் அமெரிக்கா செல்பவர்கள், தங்களுடன் தங்கள் மனைவியை அழைத்துச் செல்வதற்கு எச்-4 என்னும் விசாவை பயன்படுத்தி வருகின்றனர். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், எச்-4 விசாவில் அமெரிக்கா செல்பவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் ஒபாமா சட்டத் திருத்தம் கொண்டுவந்தார்.
இதன்மூலமும் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் அமெரிக்கா சென்று வேலை பார்த்து வந்தனர். இதிலும் இந்தியர்களே முன்னணியில் இருந்து வருகின்றனர். குறிப்பாக பொறியியல் பட்டம் படித்த பெண்களே அதிக அளவில் பயன்பெற்று வந்தனர். அமெரிக்க அரசின் புள்ளிவிவரப்படி கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2017ஆம ஆண்டு வரையிலும் சுமார் 1 லட்சம் பேர் எச்-4 விசாவில் அமெரிக்காவில் வேலை பார்த்து வருகின்றனர்.
கடந்த 2017ஆம் ஆண்டில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே இந்தியர்களுக்கு எதிரான மனநிலையிலேயே இருந்து வருகிறார். இதனால் தானோ என்னவோ வந்ததில் இருந்தே, அமெரிக்க இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு வழங்குவதற்காக, இந்திய ஐடி துறையினர் பார்த்து வந்த வேலைகளை எல்லாம் பறித்து அவர்களுக்கு தானமாக அளிக்க முன்வந்துவிட்டார்.
முதலில் எச்-1பி விசா பெற்று அமெரிக்கா செல்பவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் விதமாக விசா நடைமுறையில் அதிக அளவில் கட்டுப்பாடுகளை கொண்டுவந்தார். எச்-1பி விசா வேண்டுமானால் அவர்கள் ஆண்டுக்கு 95000 டாலர்கள் சம்பளம் வாங்கவேண்டும் என்று உத்தரவிட்டார். பின்னர் எச்-1பி விசா அனுமதி வேண்டுவோரின் வேலை எச்-1பி தகுதிப் பட்டியலில் இருந்தால் மட்டுமே விசா வழங்கப்படும் என்று உத்தரவிட்டார்.
அடுத்ததாக எச்-1பி விசாவில் அமெரிக்கா செல்வோர் தங்களுடன் தங்கள் மனைவியையும் அழைத்துச் செல்வதற்காக வழங்கப்படும் எச்-4 இஏடி (Employment Authorization Document-EAD) விசாவிலும் முட்டுக்கட்டை போட திட்டமிட்டுள்ளார். அதாவது எச்-4 விசாவில் ஒபாமா கொண்டு வந்த வேலை உறுதிச் சட்டத்தில் மாற்றம் செய்வதற்கு ட்ரம்ப் முன்வந்து வந்துவிட்டார்.
இதற்கான ஆரம்ப கட்ட வேலைகளை கடந்த பிப்ரவரி மாதத்திலேயே நோண்ட ஆரம்பித்துவிட்டார். மேலும் இது பற்றி பார்லிமெண்டில் விவாதிப்பதற்கான அறிக்கையை கடந்த 22ஆம் தேதியே அனுப்பிவிட்டார். இதனால் எச்-4 விசா பெற்று அமெரிக்காவில் வேலை பார்க்கும் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் எச்-4 விசாவில் அமெரிக்காவில் வேலை பார்க்கும் 1.20 லட்சம் இந்தியர்களின் வேலை வாய்ப்பை பாதுகாக்கும் வகையில் அமெரிக்க பார்லிமெண்டில் அன்னா ஜி ஈசூ (Anna G Eshoo) மற்றும் ஜோ லோஃப்கிரன் ஆகிய இரண்டு எம்பிக்கள் இந்த சட்ட திருத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.
இந்தத் தீர்மானத்தில், எச்-4 விசா பெற்று அமெரிக்காவில் வேலை பார்ப்பவர்கள் அனைவருமே அதிக கல்வித் தகுதி உடையவர்களாக இருப்பதோடு அதிக வேலைத் திறமையை கொண்டுள்ளவர்களாக இருக்கின்றனர். இவர்களின் சேவை நமது நாட்டுக்கு தேவை என்பதோடு அவர்களின் சேவையை நாம் இழந்துவிடக்கூடாது. எனவே, இவர்களின் வேலை வாய்ப்பு உரிமையை நாம் பறிக்கக் கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் கொண்டுவந்துள்ள எச்-4 விசா சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு பெரும்பாலான எம்பிக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆகவே இந்தியர்களின் வேலை பறிபோகும் ஆபத்து முறியடிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.