டெல்லி : ஆடி போய் ஆவணியும் வந்தாச்சு.. ஐயா ஜாலி ஜாலி இனி நிறைய திருவிழாக்கள் வருமே என்று நம் மக்களிடையே குதூகலத்தை ஏற்படுத்தும் இம்மாதத்தில், இன்னும் இதை அதிகரிக்க பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, அதிரடியான சில சலுகைகளை அறிவித்துள்ளது.
ஆமாங்கா.. பொருளாதார மந்த நிலை காரணமாக, ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் துறையும் வீழ்ச்சி கண்டு காணப்படுகிறது. இந்த நிலையில், எஸ்.பி.ஐயின் இந்த அதிரடி சலுகை, துவண்டு போன நிறுவனங்கள் துளிர் விடும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக கார் லோனுக்கான பிராஸஸிங் கட்டணத்தை நீக்குவதாக எஸ்.பி.ஐ அறிவித்துள்ளது.
அதுமட்டும் அல்லாமல் வட்டி விகிதத்திலும் மாற்றம் செய்துள்ளது. எஸ்.பி.ஐ கார் லோனுக்கான குறைந்த பட்ச வட்டி விகிதம் 8.70 சதவிகிதத்திலிருந்து ஆரபிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.
கார் லோன் : பிராஸசிங் கட்டணம் இல்லை
இந்த அதிரடியான விழாக்கால சலுகையானது, விழாக்கால விற்பனை சலுகையாகவும் பண்டிகை காலங்கள் நெருங்குவதால் கார் விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்தில் எஸ்பிஐ வங்கி இந்த முடிவினை எடுத்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. எப்படியோ, கார் கடன் வழங்குவதற்கான பிராஸசிங் கட்டணத்தை நீக்கியிருப்பதோடு கார் கடனுக்கு மிகக்குறைந்த வட்டி விகித்தத்தையும் 8.70 சதவிகிதமாக குறைத்திருப்பது, கார் விற்பனையாளர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றே கூறலாம். மேலும் சம்பளம் பெறும் வாடிக்கையாளர்கள் காரின் விலையில் 90 சதவிகிதம் வரை கூட கடன் பெறலாம் என்றும் எஸ்.பி.ஐ கூறியுள்ளது.
தனி நபர் கடனில் சலுகையா?
இது தவிர எஸ்பிஐயின் தனிநபர் கடன் விகிதம் 20 லட்ச ரூபாயாகவும், வட்டி விகிதம் 10.75 சதவிகிதமாகவும் திருப்பி செலுத்தும் காலத்தை 6 ஆண்டுகளாகவும் மாற்றியுள்ளது. அதிலும் சம்பள கணக்கு உள்ள வாடிக்கையாளர்கள் முன் ஒப்புதல் பெற்ற டிஜிட்டல் கடன்களை ரூ.5 லட்சம் வரை யூனோ ஆப் மூலமாக பெறலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்விக் கடனுக்கும் சில சலுகைகள்
கல்விக் கடன் 50 லட்சம் ரூபாய் முதல் வெளிநாட்டிற்கு சென்று படிப்பதாக இருந்தால் 1.50 கோடி ரூபாய் வரை 8.25 சதவிகிதம் வட்டி விகித முறையில் வழங்கப்படும் என்றும், திருப்பி செலுத்தும் காலம் 15 ஆண்டுகளாக வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வீட்டுகடனுக்கான வட்டி குறைப்பு
இது தவிர ரிசர்வ் வங்கியின் ரெபோ விகிதம் வீட்டுக் கடனுடன் இணைத்திருப்பதால், எஸ்.பி.ஐயின் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் மிக மலிவான வட்டி விகிதமாக 8.05 சதவிகிதமாக குறைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வட்டி விகிதமானது ஏற்கனவே இருக்கும் வீட்டு கடன் களாகட்டும் அல்லது புதிய கடனாகட்டும், வரும் செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.
கடன்களுக்கான அவகாசம் நீட்டிப்பு
மேலும் படு வீழ்ச்சி கண்டு வரும் ஆட்டோமொபைல் துறையில் உள்ள, வாகன விற்பனையாளர்களுக்கு கடனை திரும்ப செலுத்த எஸ்.பி.ஐ 15 - 30 நேரத்தை எஸ்.பி.ஐ நீட்டித்து வருகிறது. கடுமையான வீற்பனை சரிவை கண்டுள்ள ஆட்டோமொபைல் துறையில், பல வினியோகஸ்தர்கள் கடனை திரும்ப செலுத்துவதில் தாமதமாகி வருகிறது என்றும் கூறியுள்ளது. இதனால் இவர்களுக்கு மேலும் கால அவகாசத்தை நீட்டித்துள்ளது இவ்வங்கி.
விற்பனை படு வீழ்ச்சி
மேலும் கடந்த 19 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பயணிகள் வாகனம் விற்பனை, கடந்த ஜூலை மாதத்தில் 31 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு காணப்படுகிறது. மேலும் வாகன விற்பனையாளர்களுக்கு 11,500 கோடி ரூபாயை கடனாக கொடுத்துள்ளது என்றும், சாதாரணமாக இந்த கடன் கள் 60 நாட்களில் திரும்ப செலுதப்பட வேண்டும், ஆனால் ஆட்டோமொபைல் துறையில் உள்ள வீழ்ச்சியால் இது 75 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், சில டீலர்களுக்கு 90 நாட்களாகவும் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் எஸ்.பி.ஐயின் நிர்வாக இயக்குனர் பி.கே குப்தா கூறியுள்ளார்.