பங்கு சந்தை என்றாலே பத்தடி தள்ளி நிற்கும் முதலீட்டாளர்கள் மத்தியில், லாபம் சம்பாதிக்கும் முதலீட்டாளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
எனினும் தற்போது பங்கு சந்தையின் மீதான ஆர்வமும் அதிகரித்து வருகின்றது. முதலில் பங்கு சந்தையில் நேரடியாக முதலீடு செய்பவர்கள், ஆரம்பத்தில் எப்படி செய்வது என்று தெரியாமல் முதலீட்டினை இழந்து விடுகின்றனர். அப்படி இருப்பவர்கள் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடுகள் செய்யலாம்.
முதலில் சந்தையினை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு பங்கினை வாங்குகிறீர்கள் என்றால் ஏன் அந்த பங்கினை வாங்குகிறீர்கள்? என யோசிக்க வேண்டும். ஆக முதலில் நீங்கள் வர்த்தகம் செய்யும் பங்குகளை புரிந்து கொள்ள வேண்டும். சூழ்நிலையை பொறுத்து வர்த்தகம் செய்ய தொடங்க வேண்டும்.
வர்த்தகம் செய்யும் முன் தெளிவாக இருங்கள்
குறிப்பாக வர்த்தகம் செய்யும் முன் தெளிவாக வரையறுக்கப்பட்ட விதிகளை உருவாக்க வேண்டும். எங்கு நுழைந்து, எங்கு வெளியேறுவதது என்ற திட்டமிடல் இருக்க வேண்டும். இந்த திட்டத்தை உருவாக்கும் போது, ரிஸ்க் மேனேஜ்மெண்ட் மற்றும் பண மேலாண்மைக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆக ஸ்டாப் லாஸ் என்பதை எப்போதும் திட்டமிடுங்கள். இந்த நிலையை எந்த சூழ்நிலையிலும் மாற்றம் செய்யக் கூடாது.
தீபக் ஃபெர்டிலைசர்ஸ் பங்கு நிலவரம்
இன்று நாம் பார்க்கவிருக்கும் முதல் பங்கு தீபக் ஃபெர்டிலைசர்ஸ் . முதலீட்டாளர்களுக்கு பல மடங்கு லாபம் கொடுத்துள்ள இந்த பங்கு விலையானது 158.35 ரூபாயில் இருந்து 445.55 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மட்டும் 168% அதிகரித்துள்ளது. இதே கடந்த ஒரு ஆண்டில் 183% அதிகரித்துள்ளது. இந்த நிறுவனம் அதன் ஜூன் காலாண்டு அறிக்கையினை வெளியிட்டுள்ள பிறகு, 5% ஏற்றம் கண்டு அப்பர் சர்க்யூட் ஆகியுள்ளது.
தீபக் பெர்டிலைசர்ஸ் லாபம்
கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் அதன் நிகரலாபம் 128.02 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 120.14 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே இதன் வருவாய் விகிதம் 38% அதிகரித்து, 1902.10 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 1382.08 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் புரோமோட்டர்கள் அதன் பங்கு விகிதத்தினை 52.2%ல் இருந்து 53.1% ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் நிறுவனம் தனது மூலதனத்தினை அதிகரித்துள்ளது.
நிறுவனத்தின் செயல்பாடு
இதுகுறித்து இந்த நிறுவனத்தின் தலைவர் சைலேஷ் சி மேத்தா தரமான பாதுகாப்பான வழங்கலுடன், நாங்கள் சந்தையில் தொடர்ந்து முக்கிய பங்கு வகிப்போம். எங்களது பயிர்களுக்கு இந்திய அரசு NBS ஒப்புதலை அறிவித்துள்ளது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மேலும் அடுத்த ராபி பருவத்தில் குறிப்பிட்ட பயிர் தரங்களை அறிமுகப்படுத்துவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
ஏற்றம் காணலாம்
தொடர்ந்து தீபக் பெர்டிலைசர்ஸ் நிறுவனம் 6 ஆண்டுகளாகவே சாதகமான முடிவுகளை அறிவித்து வருகின்றது. இந்த நிறுவனம் டெக்னிக்கலாக சற்று ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது. இதே MACD, Bollinger Band, KST, and OBV உள்ளிட்ட குறியீடுகளும் சாதகமாகவே காணப்படுகிறது.
குஜராத் ஃப்ளோரோ கெமிக்கல்ஸ் பங்கு விலை
இந்த பங்கின் விலையானது மே 3, 2021 அன்று, 380.75 ரூபாயாக இருந்த நிலையில், இன்று அதன் விலை 794.30 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகிறது. இந்த காலகட்டத்தில் 108.6% லாபம் கண்டுள்ளது. இதே நடப்பு ஆண்டு தொடக்கத்தில் இருந்து 135% அதிகரித்துள்ளது.
டெக்னிக்கலாக எப்படியுள்ளது?
இன்று காலை தொடக்கத்தில் தொடக்கத்திலேயே 1.2% ஏற்றம் கண்டு, 766 ரூபாயாக தொடங்கியது. இது கடந்த அமர்வில் 756.50 ரூபாயாகவும் காணப்பட்டது. இந்த பங்கின் விலையானது தொடர்ந்து 5 நாள், 10 நாள், 20 நாள், 50 நாள், 100 நாள், 200 நாள் மூவிங் ஆவரேஜ்ஜூக்கு மேலாக உள்ளது.
இது தவிர டெக்னிக்கலாக இந்த பங்கின் விலையானது தொடர்ந்து ஏற்றம் காணும் விதமாக காணப்படுகிறது. இதோடு MACD, Bollinger Band, KST, and OBV உள்ளிட்ட குறியீடுகளும் சாதகமாகவே காணப்படுகிறது.
Alkyl Amines Chemicals
இந்த பங்கின் விலையானது நடப்பு ஆண்டில் இதுவரையில் 1553 ரூபாயில் இருந்து, 4,271 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது வரையில் 177% அதிகரித்துள்ளது. இந்த பங்கின் விலையானது கடந்த 3 ஆண்டுகளில் 1518%மும், கடந்த ஐந்து ஆண்டுகளில் 3,294%மும் ஏற்றம் கண்டுள்ளது. நிபுணர்கள் இந்த பங்கின் விலையானது இன்னும் நன்றாக ஏற்றம் காணும் என்று கூறி வருகின்றனர்.
இன்னும் அதிகரிக்கலாம்
ஏனெனில் நிபுணர்கள் இன்னும் இந்த பங்கின் விலையானது நல்ல ஏற்றம் காணும் என்றே நம்புகின்றனர். ஏனெனில் தடுப்பு மருந்தின் தேவையானது அதிகரிக்கும் என்பதால், இந்த பங்கின் விலையும் அதிகரிக்கலாம் என்றே நிபுணர்கள் நம்புகின்றனர்.
21,000 கோடி ரூபாய்க்கு மேல் சந்தை மூலதனத்தினை கொண்டுள்ள இந்த பங்கானது, 5 நாள், 10 நாள், 20 நாள், 50 நாள், 100 நாள் மற்றும் 200 நாள் மூவிங்க் ஆவரேஜ்ஜூக்கு மேலாகவே உள்ளது.
அதோடு டெக்னிக்கலாக இன்னும் சில குறிகாட்டிகளும் ஏற்றம் காணும் விதமாக உள்ள நிலையில், இந்த பங்கின் விலையானது இன்னும் ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது.
எங்கு உற்பத்தி?
அல்கைல் அமின்ஸ் கெமிக்கல்ஸ் நிறுவனம் பல்வேறு மருந்து உற்பத்தியில் ஈடுபட்டு வரும் ஒரு நிறுவனமாகும். இந்த நிறுவனம் மகாராஷ்டிராவின் படல்கங்கா மற்றும் குர்கும்பிலும், குஜராத்தில் தஹேஜிலும் 12 உற்பத்தி ஆலைகள் மற்றும் தொடர்புடைய பயன்பாடுகளுடன் மூன்று உற்பத்தி தளங்களைக் கொண்டுள்ளது.
நிபுணர்களின் எதிர்பார்ப்பு
மொத்தத்தில் எதிர்காலத்திலும் இந்த நிறுவனத்தின் தேவை என்பது அதிகமாகவே உள்ள நிலையில், இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது இன்னும் அதிகரிக்கலாம். இதனால் முதலீட்டாளர்களுக்கு இன்னும் பொற்காலம் உள்ளது. ஆக இந்த பங்கின் விலை சற்று குறையும் போது, நீண்டகால நோக்கில் வாங்கி வைக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
எகிறிய லாபம்
இந்த நிறுவனத்தின் லாபம் கடந்த ஜூன் காலாண்டில் 78.54 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 52.78 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதே செயல்பாட்டின் மூலம் கிடைத்த வருவாய் 60% அதிகரித்து, 391.81 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே கடந்த ஆண்டில் 245.15 கோடி ரூபாயாக இருந்தது.