துபாய்: அமெரிக்க ராணுவ வீரர்கள், தங்கியுள்ள ஈராக்கிலுள்ள முகாம்கள் மீது ஈரான் 12 ஏவுகணைகளை வீசியது என்று பென்டகன் தெரிவித்ததுமே, உலகமெங்கும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
"இந்த ஏவுகணைகள் ஈரானில் இருந்து ஏவப்பட்டன என்பது தெளிவாகிறது" என்று அடித்துச் சொன்னார், பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜொனாதன் ஹாஃப்மேன் தனது அறிக்கையில்.
இதையடுத்து, அமெரிக்கா பதிலுக்கு தாக்குதல் நடத்தும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனால், உலகம் முழுக்க, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பொருளாதாரத்தில் அது தாக்கத்தை ஏற்படுத்தும்.
நட்பு நாடு சவுதி
மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவின் நட்பு நாடாக விளங்குவது சவுதி அரேபியா. இங்கும், இந்த போர் பதற்றம் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சவுதியில், இந்திய பணியாளர்கள் அதிகம் வேலை பார்க்கிறார்கள். ஈரான்-அமெரிக்கா போர் பதற்றம் காரணமாக, சவுதி அரேபியாவில் எந்த மாதிரி தாக்கம் ஏற்படும் என்பது நமக்கும் அறியப்பட வேண்டிய முக்கிய தகவல்.
சவுதி பங்குகள்
டிசம்பர் 11 ஆம் தேதி, சவுதி எண்ணெய் நிறுவனமான அரெம்கோ, பங்குச் சந்தையில், வர்த்தகம் தொடங்கியதிலிருந்து முதல் முறையாக, அவற்றின் பங்குகள் புதன்கிழமை 34 ரியால்களில் (9.06 டாலர்) தொடங்கப்பட்டன. அதாவது சரிவை சந்தித்தன. சவுதியில், பங்குகளும் 1.4% சரிந்தன.
விமான சேவை
ஈரானின் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பின்னர் துபாயை தலைமையிடமாக கொண்ட எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ், பாக்தாத் இடையேயான, விமான சேவையை ரத்து செய்ததுடன், தேவைப்பட்டால் ஆலோசித்து, பிற மாற்றங்களையும் செய்யும் என்று கூறியுள்ளது.
பல விமானங்கள்
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் லிமிடெட் தனது விமானங்கள் அனைத்தையும், ஈரானிய வான்வெளியில் பறக்க கூடாது என உத்தரவிட்டுள்ளது. மலேசியா ஏர்லைன்ஸ், ஈராக் வான்வெளியில் பறக்கப்போவதில்லை என்றும், ஈரானைத் தவிர்ப்பதற்காக மறு பாதையில் செல்லப்போவதாகவும், தேவைப்பட்டால் மேலும் வேறு மாற்றங்களைச் செய்வதாகவும் கூறியுள்ளது.
சவுதிக்கு நல்ல செய்தி
சவூதி அரேபியாவில் ஊடகங்கள் ஈரான் தளபதி சுலைமானியை அமெரிக்கா கொன்றதை, ஒரு நல்ல செய்தியாக கொண்டாடின. சுலைமானி, ஈரானின் பிராந்திய நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கினார், மேலும் அடிக்கடி சவுதி அரேபியாவையும் அதன் நட்பு நாடுகளையும் இலக்கு வைத்து தாக்கினார். ஈரானைப் பற்றிய சவுதியின் பயத்தில், முக்கியமானவராக இருந்தார். அந்த வகையில், சவுதிக்கு, இது நல்ல செய்தி. ஆனால், அமெரிக்க நடவடிக்கை மற்றும் அதன் பின்விளைவுகள் அனைத்தும் சவுதிக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை மறுக்க முடியாது.