ஒரு காலகட்டத்தில் வீடு என்றால், அதற்கு முன்பு சரியான இடத்தில் இடம் வாங்கி, தேவையான வசதிகளை செய்து, பின்னர் வீடுகட்டி குடியேறுவர். அந்த வீடு கட்டும்போதும் கூடவே இருந்து பார்த்து பார்த்து கட்டுவார்கள். ஒரு செங்கல் வாங்க வேண்டும் என்றால் கூட உரிமையாளர்கள் கூடவே சென்று வாங்கி வருவார்கள். அல்லது உரிமையாளர்களே எல்லா பொருளும் வாங்கி கொடுத்து, கட்டுமான பணியாளர்களை வைத்து கட்டுவார்கள்.
ஆனால் இன்று அப்படியில்லை. இன்றைய காலக்கட்டத்தில் அதற்கான நேரமும் நம்மக்களிடம் இல்லை. அப்படியே நேரம் இருந்தாலும், மக்கள் ரிஸ்க் எடுக்க தயாராகவும் இல்லை.
அதிலும் வளர்ந்து வரும் அடுக்குமாடி கலாச்சாரத்தில், வீட்டோடு அனைத்து பர்னிச்சர் உள்ளிட்ட அனைத்தும் இருக்கிறது. ஆக நாம் வெறும் கையை வீசிக் கொண்டு போனால் கூட, குடியேற முடியும். அந்தளவுக்கு ரியல் எஸ்டேட் துறையானது வளர்ந்துவிட்டது.
அடுக்குமாடி கலாச்சாரம்
இது சென்னை மட்டும் அல்லது, மற்ற பெரும் நகரங்களிலும் இந்த கலாச்சாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்று நாம் கட்டி முடிக்கப்பட்ட வீடு வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம். முதலில் நாம் ஒரு இடமே வீடோ எதுவானலும் சரி, ரியல் எஸ்டேட் துறையில் முதலில் கவனிக்க வேண்டியது தொடர்பான ஆவணங்கள் தான்.
முக்கியமாக கவனிக்க வேண்டியவை
ஒரு சொத்தினை வாங்குகிறீர்கள் என்றால் முதலில் நாம் பார்க்க வேண்டியது குடியிருப்பு மனையின் மூலப் பத்திரத்தினை தான். அசல் யார் பெயரில் இருக்கிறது. யார் யார் கைக்கு சொத்து மாறியிருக்கிறது. கட்டிடத்தினை யார் கட்டியது. அதன் வரைபடம். திட்ட அனுமதி வாங்கியிருக்கிறார்களா? என்பதை முக்கியமாக கவனிக்க வேண்டும். மேலும் மின் இணைப்பு பெயர், தண்ணீர் இணைப்பு பெயர் உள்ளிட்டவையும் யார் பெயரில் இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும்.
இந்த ஆவணங்கள் எல்லாம் பாருங்கள்
அதே போல இந்த சொத்துகளை வாங்குபோது மேற்கண்ட பெயரில் மின்சார கட்டணம், தண்ணீர் கட்டணம் ஏதாவது நிலுவை இருக்கிறதா? என்பதனையும் பார்க்க வேண்டும். அதனையடுத்து அடுக்குமாடி குடியிருப்பு என்றால், அந்த அடுக்குமாடியில் எத்தனை மாடிகளுக்கு அனுமதி இருக்கிறது. எவ்வளவு கட்டப்பட்டிருக்கிறது. ஏனெனில் சிலர் 2 மாடி கட்ட அனுமதி வாங்கி 3- 4 கட்டியிருப்பார்கள். பின்னர் அதற்கு வரைபடம் இல்லாமல் அவஸ்தை பட வேண்டியிருக்கும். ஏனெனில் பின்னாளில் நீங்கள் வீட்டு கடன் வாங்க நினைத்தால் அப்போது சிரமப்பட வேண்டியிருக்கும். ஆக இப்படி சின்ன சின்ன விஷயங்களை கூட பார்க்க வேண்டும். ஏனெனில் பின்னாளில் இதுவே உங்களுக்கு பெரும் பிரச்சனையாக மாறக்கூடும்.
ஆலோசித்து வாங்குகள்
குறிப்பாக அசல் மாடிக் குடியிருப்பு சம்பந்தமான எல்லா ஆவணங்களின் அசல் பத்திரங்கள், விற்பனை செய்பவரிடம் இருக்கிறதா? என்பதை கவனமாக பார்க்க வேண்டும். ஏனெனில் அசலை வைத்து கடன் வாங்கி விட்டு, நகல் மூலம் ஏமாற்றவும் வாய்ப்பிருகிறது. ஆக என்ன காரணத்திற்காக நகல் வாங்கப்பட்டிருக்கிறது என்பதனையும் கவனிக்க வேண்டும். இப்படி இன்னும் பல ஆவணங்கள், விதிமுறைகள் கவனிக்க வேண்டியிருக்கும். ஆக உங்களுக்கு தெரியவில்லை எனில், சரியான நிபுணர்களிடம் கொடுத்து ஆலோசித்து பின் வாங்கலாம்.
எதிர்கால மதிப்பு எப்படியிருக்கும்
ஒரு வீட்டினை இதனை மட்டும் பார்த்து வாங்கினால் மட்டும் போதுமா? என்ன? நீங்கள் வாங்கப்போகும் இடம் எந்த மாதிரியானது? வருங்காலத்தில் விலை அதிகரிக்குமா?உங்கள் முதலீட்டுக்கு உகந்ததா? வீடு எப்படி கட்டியிருக்கிறார்கள். உங்கள் முதலீட்டுக்கு சரியான வீடுதானா? ஏனெனில் பிடிக்கவில்லை என மாற்ற இது வாடகை வீடு அல்ல. ஆக பல லட்சம் கொடுத்து ஒரு வீட்டினை வாங்குபோது, குறிப்பாக கட்டிமுடிக்கப்பட்ட வீட்டினை வாங்குபோது எதெல்லாம் கவனிக்கப்பட வேண்டும்.
வீட்டுக் கடன் கிடைக்குமா?
நீங்கள் வாங்க முடிவெடுத்த உடனே அந்த ஏரியாவில்? நீங்கள் வாங்கவிருக்கும் வீட்டுக்கு எவ்வளவு கடன் பெற முடியும். நீங்கள் எதிர்பார்க்கும் கடன் கிடைக்குமா? வட்டி விகிதம் எவ்வளவு? மற்ற கட்டணங்கள் எவ்வளவு? என அனைத்தும் பார்க்க வேண்டும். அதே போல நீங்கள் வாங்கும் வீட்டில் இருந்து பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனை மற்றும் பிற வசதிகள் அருகில் உள்ளதா? என பார்க்கவும். ஏனெனில் நீங்கள் அங்கு சென்று விட்டு, பின்னர் யோசித்தால் அதுவும் உங்களுக்கு பிரச்சனையாகவே மாறும். இன்றைய பெரு நகரங்களில் உள்ள அபார்ட்மெண்ட்களில் அனைத்து வசதிகளும் இருந்தாலும், சிறு நகரங்களில் அந்த மாதிரியான வசதிகள் இருக்காது. ஆக அதனையும் ஆலோசித்து வாங்குவது நல்லது.