இந்திய டெலிகாம் சந்தையில் ராஜாவாக இருந்த ஏர்டெல் ஜியோ வந்த பின்பு தலைகீழாக மாறியுள்ளது, அதிலும் கடந்த சில காலாண்டுகளில் மோசமான வருவாய் மற்றும் லாபம் அளவீடுகளை வெளியிட்டுள்ளது.
3 பெரிய நிறுவனங்கள்
தற்போது டெலிகாம் சந்தையில் 3 பெரிய நிறுவனங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் வாடிக்கையாளர்களுக்காக நடக்கும் குடுமி பிடி சண்டைகள் தற்போது குறைந்துள்ள நிலையில், ஏர்டெல் நிர்வாகம் இனியும் கால் மற்றும் டேட்டா கட்டணத்தைக் குறைக்க முடியாதென அறிவித்துள்ளது.
ARPU இலக்கு
இதுமட்டும் அல்லாமல் தற்போது ஏர்டெல், ஜியோ, வோடபோன் - ஐடியா ஆகிய 3 நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை எப்படித் தக்கவைப்பது, தொடர்ந்து அவர்களில் மூலம் எப்படி அதிகளவிலான வருமானத்தைப் பெறுவது என்பதைப் பற்றி மட்டுமே ஆலோசனை செய்து ARPU-வை உயர்த்தும் திட்டத்துடனே இயங்கி வருகிறது.
ராஜன் பார்தி மிட்டல்
இதுகுறித்துப் பார்தி எண்டர்பிரைசர்ஸ் நிறுவனத்தின் துணை தலைவர் மற்றும் நிர்வாகத் தலைவர் ராஜன் பார்தி மிட்டல் கூறுகையில், தற்போது சேவை கட்டணங்கள் மிகவும் குறைவாகவே உள்ளது, விலை அளவுகளில் எப்போதும் கண் இருந்தாலும், தற்போது டெலிகாம் சந்தையின் வர்த்தகம் தடுமாற்றத்தில் இருந்து நிலைப்பெற்றுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் விலையைத் தொடர்ந்து குறைக்காமல் விலையை உயர்த்த 3 நிறுவனங்களும் முடிவு செய்தால் இத்துறை மேலும் வளர்ச்சி அடையும் எனத் தெரிவித்துள்ளார்.
ஜியோ தான் டாப்பு
ARPU என்பது வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறும் சராசரி வருமானம். தற்போதைய நிலையில் ஜியோ ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து சராசரியாக 130 ரூபாய் வருமானம் பெறுகிறது, இதுவே ஏர்டெல் 104 ரூபாயும், வோடபோன் ஐடியா 89 ரூபாய் மட்டுமே வருமானமாகப் பெறுகிறது.
ஏர்டெல் - ஜியோ
கட்டணத்தை இனி குறைக்க முடியாதென ஏர்டெல் கூறிவிட்ட நிலையில் மகன் கல்யாண வேலையில் பிசியாக இருக்கும் முகேஷ் அம்பானி ஜியோவின் சேவைக் கட்டணத்தைக் குறைப்பாரா..?