குஜராத் மாநிலத்தில் வித்தியாசமான ஒரு ஹோட்டல் திறக்கப்பட்டதை அடுத்து இப்படி ஒரு ஹோட்டல் நம்ம ஊரில் இல்லையே என்ற ஏக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு அந்த ஹோட்டல் செயல்பட்டு வருகிறது.
ஹோட்டலில் சாப்பிடும் உணவுப் பொருட்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்ற நிலையில் இந்த ஹோட்டலில் பிளாஸ்டிக் கழிவு பொருட்களை வாங்கிக்கொண்டு உணவு தருகிறார்கள்.
சுற்றுச்சூழல் மேம்பாட்டை காக்கும் வகையில் இயங்கி வரும் இந்த ஹோட்டலுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
பணத்திற்கு பதில் பிளாஸ்டிக்
நீங்கள் உணவகத்திற்கு சென்று உணவு சாப்பிட்டுவிட்டு பணத்திற்கு பதிலாக பிளாஸ்டிக் கழிவுகளை கொடுத்து விட்டு வெளியே வரலாம் என்று ஒரு முறை இருந்தால் உங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். ஆம்! அப்படி ஒரு ஹோட்டல் தான் குஜராத் மாநிலத்தில் உள்ள ஜூனாகத் என்ற பகுதியில் புதிதாக திறக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் தடை
ஜூலை 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பயன்படுத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுப்பதற்காக மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த நிலையில் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு வந்து கொடுத்துவிட்டு ருசியான உணவை வாங்கி செல்லலாம் என்ற முறையை குஜராத் ஹோட்டல் அறிமுகம் செய்துள்ளது.
சர்வோதய் சாகி மண்டல்
வாடிக்கையாளர்கள் தங்கள் வீடுகளில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு வந்து அந்த பிளாஸ்டிக் கழிவுகளின் எடைக்கு ஏற்ப உணவை பெற்றுக் கொள்ளலாம். இந்த ஹோட்டல் சர்வோதய் சாகி மண்டல் என்ற அமைப்பு விவசாயிகள் மற்றும் பெண்கள் குழுவின் உதவியுடன் நடத்தி வருகிறது.
ஆர்கானிக் உணவு
இந்த ஹோட்டலில் தயார் செய்யப்படும் உணவுப்பொருட்கள் அனைத்தும் ஆர்கானிக் மற்றும் உள்ளூர் விவசாயிகளின் விளைச்சலில் கிடைத்த பொருட்களில் இருந்து மட்டுமே தயாரிக்கப்படுகிறது. இதுகுறித்து ஜூனாகத் மாவட்ட கலெக்டர் ரசித் ராஜ் அவர்கள் கூறியபோது 'எங்கள் பகுதியை நாங்கள் சுத்தமான மற்றும் பசுமையான பகுதியாக மாற்றுவதற்கு ஊக்குவிக்க விரும்புகிறோம். இந்த ஹோட்டலுக்கு 500 கிராம் பிளாஸ்டிக் கொண்டு வந்தால் உங்களுக்கு ஒரு கிளாஸ் எலுமிச்சை ஜூஸ் தருகிறோம். அதேபோல் ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் கொடுத்தால் ஒரு பிளேட் தோக்லா அல்லது போஹா கொடுப்போம்' என்று கூறியுள்ளார்.
மெனு
இந்த ஹோட்டலில் உள்ள மெனுவும் மிகவும் ஆச்சரியமான வகையில் இருக்கும். வெற்றிலை, ரோஜா, அத்திப்பழம், பேரீச்சம்பழம் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட உணவு மண்பாத்திரத்தில் பரிமாறப்படும் என்பது இதன் கூடுதல் சிறப்பு.
ருசியான உணவு
ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த பிளாஸ்டிக் கழிவுகளை குப்பையில் கொட்டுவதற்கு பதிலாக இந்த ஹோட்டலில் கொடுத்து நல்ல ருசியான உணவாக உட்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
பிளாஸ்டிக் தடை
பிளாஸ்டிக் பயன்பாடு காரணமாக மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகள், கடல் வாழ் உயிரினங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பூமியை நீண்டகாலம் உயிருடன் வைத்திருப்பதற்கு கண்டிப்பாக பிளாஸ்டிக் தடை என்ற நடவடிக்கை வேண்டும். இல்லையென்றால் நமது வருங்கால சந்ததிகள் மிகவும் பாதிக்கப்படுவார்கள்.
மாற்று வழி
நமது வீட்டை சுத்தமாக வைத்திருப்பது போல் நமது பூமியையும் பாதுகாப்பாக சுத்தமாக வைத்திருப்பதற்கு ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்தி விட்டு, நம்மால் இயன்றவரை மாற்று வழிகளை கண்டறிய வேண்டும் என்பதே அனைவரது நோக்கமாக உள்ளது.