டெல்லி: மோடி தலைமையிலான அரசு பணமதிப்பு இழப்பு காலத்தில் இருந்து இந்திய மக்கள் தங்கள் பணப் பரிமாற்றங்களை ஆன்லைனில் செய்யச் சொல்லிக் கொண்டு இருக்கிறது.
அதற்குத் தகுந்தாற் போல சமீபத்தில் NEFT & RTGS போன்ற ஆன்லைன் பணப் பரிமாற்றங்களுக்கு கட்டணங்கள் விதிப்பதை தவிர்க்கச் சொல்லி இருந்தது ஆர்பிஐ.
அதோடு வரும் டிசம்பர் 2019 முதல் 24 மணி நேரமும் NEFT வழியாக பணப் பரிமாற்றம் செய்ய முடியும் எனவும் சொல்லி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது ஆர்பிஐ.
தற்போது
இந்தியாவின் மொத்த ஆன்லைன் பணப் பரிமாற்றத்தில் சுமார் 83 சதவிகித பரிமாற்றங்கள் NEFT வழியாகத் தான் நடக்கிறதாம். தற்போதைய வசதிகள் படி, வங்கி வேலை நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை NEFT பணப் பரிமாற்றத்தை பயன்படுத்தலாம். இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை இந்த NEFT சேவையை பயன்படுத்த முடியாமல் இருக்கிறது. இனி வரும் டிசம்பர் முதல் 24 மணி நேரமும் NEFT சேவையைப் பயன்படுத்தலாம். அதற்கு தகுந்தாற் போல க்ளியரன்ஸும் வேகமாக இருக்கும் எனச் சொல்லி இருக்கிறது ஆர்பிஐ.
கணக்கு
இந்தியாவில் கடந்த 2018 - 19 நிதி ஆண்டில் சுமார் 230 கோடி NEFT பரிமாற்றங்கள் நடந்து இருக்கிறதாம். இந்த பரிமாற்றங்கள் வழியாக சுமார் 228 லட்சம் கோடி ரூபாய் பணம் கை மாறி இருக்கிறது எனச் சொல்லி நம்மை ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது ஆர்பிஐ. இப்படியாக இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் NEFT பணப் பரிவர்த்தனைகளைத் தான் அதிகம் பயன்படுத்துகிறார்களாம்.
வங்கி விவரம்
இந்தியாவில் இருக்கும் 210-க்கும் மேற்பட்ட வங்கிகள் NEFT சேவையை வழங்குகிறார்கள். இதில் அரசு வணிக வங்கிகள் தொடங்கி தனியார் வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், கிராம புற வங்கிகள் , பேமெண்ட் வங்கிகள், சிறு வங்கிகள் என பல தரப்பட்ட வங்கிகளும் பயன்படுத்துகிறார்களாம். வங்கிகளைப் பொறுத்து NEFT வழியாக அதிகபட்சமாக 2 - 5 லட்சம் ரூபாய் வரை பணப் பரிமாற்றம் செய்யலாம்.
யாருக்கு சிறப்பு
NEFT சேவை அரசு வங்கிகளுக்கு மத்தியில் நடக்கும் பரிமாற்றங்களும், தனியார் வங்கிகளுக்கு மத்தியில் நடக்கும் பரிமாற்றங்களும் மிக வலுவாக இருக்கிறதாம். ஆனால் எதிர்பாராத விதமாக, தனியார் வங்கிகளில் இருந்து அரசு வங்கிகளுக்குத் தான் பெரிய அளவில் பணம் பரிமாற்றம் செய்யப்படுகிறதாம். ஆக மக்கள் தங்கள் பணத்தை வைத்துக் கொள்ள அரசு வங்கிகளைத் தான் இன்னும் அதிகமாக நம்புகிறார்கள் என்பதற்கு இதுவே ஒரு சாட்சியாக இருக்கிறது.