பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஏர் இந்தியா விமானத்தில் சிறப்பு பயணி ஒருவர் பயணம் செய்ததாக நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார்.
2017 ஆம் ஆண்டு ஓகி புயலின் போது பாதிக்கப்பட்ட கழுகு ஒன்று தான் அந்த சிறப்பு பயணி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை முதல் ராஜஸ்தான் சென்ற அந்த கழுகு குறித்த வீடியோவை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
காயமடைந்த கழுகு
கடந்த 2017 ஆம் ஆண்டு ஓகி புயலின் போது காயமடைந்த ஒரு கழுகு தற்போது நம்ப முடியாத வகையில் பறக்கும் பறவையாக மாற்றப்பட்டது என்று ஐ.ஏ.எஸ் அதிகாரி சுப்ரியா சாஹு அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
சுப்ரியா சாஹு ஐ.ஏ.எஸ்
ஐ.ஏ.எஸ் அதிகாரி சுப்ரியா சாஹு இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருப்பதாவது: 'ஓகி புயலில் அழகிய கழுகு ஒன்று படுகாயமடைந்து அதன் பிறகு பறக்க முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது 5 ஆண்டு கால சிகிச்சைக்கு பின்னர் ஏர் இந்தியா விமானத்தில் அந்த கழுகு தனது சொந்த ஊரான ராஜஸ்தானுக்கு பயணம் செய்கிறது. அந்த கழுகு தனது சொந்த ஊருக்கு பயணம் செய்வதை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது' என்று கூறியுள்ளார்.
விமானத்தில் கழுகு
கழுகை ஒரு பெட்டியில் வைத்து விமானத்தில் கொண்டு செல்லப்படும் வீடியோவை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், பறவைக்கு மறுவாழ்வு அளிக்கும் முயற்சிக்கு பல்வேறு ட்விட்டர் பயனாளர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
ட்விட்டர் பயனாளிகள்
இந்த வீடியோவை பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்றும் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட அந்த கழுகுக்கு இனி நல்ல காலம் என்றும் இந்த கழுகை 5 ஆண்டுகாலம் பராமரித்து சிகிச்சை அளித்த தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் நன்றி என்றும் ஒரு ட்விட்டர் பயனாளி எழுதியுள்ளார். கழுகை அதன் சொந்த மாநிலத்திற்கு பாதுகாப்பாக கொண்டு செல்வதை உறுதி செய்வதற்காக உங்களுக்கு பாராட்டுக்கள் என மற்றொரு ட்விட்டர் பயனர் தெரிவித்துள்ளார்.
ஓகி புயல்
கடந்த 2017-ம் ஆண்டு ஓகி புயல் வீசி தமிழ்நாடு மற்றும் இலங்கை ஆகிய பகுதிகளில் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியது. தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் இந்த புயல் காரணமாக 200க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். பலர் வீடுகளை இழந்தனர். மனிதர்கள் மட்டுமின்றி பறவைகள் விலங்குகள் என பல்வேறு உயிரினங்களும் இந்த புயலால் பாதிக்கப் பட்டது.