கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த ஆண்டு பரவத் தொடங்கிய பின்பு, அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய மாநில அரசுகள் லாக்டவுன் நடவடிக்கைகள் எடுத்தன.
ஆனால் அந்த சமயத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள் என, அனைத்து மக்களின் வாழ்க்கையையும் புரட்டி போட்டு விட்டது இந்த கொரோனா.
கொரோனா அச்சம் ஒரு புறம் எனில், மறுபுறம் பசி, பட்டினி, நடைபயணம் இப்படி ஒரு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டனர். சாப்பிட ஒரு வேளை உணவு கூட கிடைக்காத நிலையில், சொந்த ஊர்களுக்கு திரும்ப நினைத்தனர். ஆனால் போக்குவரத்து முடக்கத்தால் இயலாமல் போகவே, நடைபயணமாகவே லட்சக் கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.
2020 நினைவலைகள்
உண்மையில் அவர்களின் வலிகளை வார்த்தைகளில் சொல்லி மாளாது. சரியான உணவு கிடைக்காமல், சொந்த ஊர்களுக்கு செல்ல கிடைத்த வண்டிகளில் பயணித்து, கால்கள் வலிக்க நடந்தும் சென்றனர். இதன் பிறகு சற்றே இயல்பு நிலைக்கு திரும்பவும், மீண்டும் தங்கள் வாழ்வாதாரத்தினை தேடி திரும்பினர். ஆனால் சில மாதங்களே ஆன நிலையில் தற்போது இரண்டாம் அலை வீசத் தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டினை போல இக்கட்டான நிலை வந்து விடுமோ என்ற பயத்தினால் மக்கள் இப்போது கூட்டம் கூட்டமாக பயணம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
மீண்டும் அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்
ஏனெனில் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இரவு நேரம் பணியில் இருந்தவர்கள் தங்களது வேலையினை இழந்துள்ளனர். அதே போல தற்போது உணவகங்களும் 50% இருக்கைகளுடன் செயல்பட மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுவும் குறிப்பிட்ட நேரம் வரை தான். ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
தவிக்கும் புலம் பெயர் தொழிலாளர்கள்
இந்த நிலையில் கடந்த ஆண்டு சம்பவங்கள் தற்போது நினைவுக்கு கொண்டு வருகின்றது தற்போது நடக்கும் காட்சிகள். ஏனெனில் புலம் பெயர் தொழிலாளரகள் ரயில் நிலையங்களிலும், பேருந்து நிலையங்களிலும் அலைமோதுவதை பார்க்க முடிகிறது. அவர்கள் வேலைகளை இழந்து வருமானம் இன்றி தவிக்கும் இந்த நிலையில், முன்னெச்சரிக்கையாக தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று விட வேண்டும் என்ற முனைப்பில் இருப்பதை காண முடிகிறது.
அரங்கேறி வரும் பிரச்சனைகள்
ஏனெனில் கொரோனா பரவலின் முதல் கட்டத்தினை விட, இரண்டாம் கட்ட பரவல் என்பது மோசமாக இருந்து வருகின்றது. பல இடங்களில் தடுப்பூசி பற்றாக்குறை, ஆக்ஸிஜன் பற்றாக்குறை என பிரச்சனைகள் அரங்கேறி வருகின்றன. அரசு அனைத்துக் தயாராக இருப்பதாக கூறினாலும், கடந்த ஆண்டு நினைவலைகள் மக்கள் மனதை விட்டு இன்னும் மறையவில்லை எனலாம். கடந்த ஆண்டினை போல நாடு தழுவிய முழு லாக்டவுன் இல்லை எனினும், இனி கட்டுபாடுகள் அதிகரிக்கலாம் என்ற சூழ்நிலையே இருந்து வருகின்றது.
நஷ்டத்தில் நிறுவனங்கள்
மேலும் கடந்த ஆண்டில் முதன் முதலாக பாதிப்பு இருந்ததால், நிறுவனங்கள், நிறுவன உரிமையாளர்கள், தங்களது ஊழியர்களுக்கு ஆதரவு கொடுத்தன. ஆனால் கடந்த ஆண்டில் இருந்து வணிகம் பெரியளவில் வளர்ச்சி காணவில்லை. தற்போது தான் மீண்டு வரத் தொடங்கியது. ஆனால் இரண்டாம் கட்ட பரவல் காரணமாக மீண்டும் பழையபடி சரிவுக்கே செல்லும் நிலையில் தான் உள்ளது. இந்த நிலையில் நிறுவனங்களும், தொழில்களும் நஷ்டத்தில் உள்ள நிலையில், தொழிலாளர்களுக்கு உதவி செய்யும் நிலை இல்லை.
சொந்த ஊர்களுக்கு திரும்பும் தொழிலாளர்கள்
ஆக மீண்டும் லாக்டவுன் பற்றிய பயத்தினால் மக்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிக் கொண்டுள்ளனர். குறிப்பாக தொழிலாளர்கள் மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, பஞ்சாப், ஹரியானா, கேரளா, ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களிலிருந்து திரும்பி வருகின்றனர். இதே உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் போன்ற சில மாநிலங்களில் உள்மாவட்ட இடம் பெயர்களும் பதிவாகி வருகின்றன.
பல தொழிலாளர்கள்
இப்படி திரும்பி வரும் தொழிலாளர்களில் பலரும் கட்டுமானம், ஜவுளித் துறை, சுரங்க தொழிலாளர்கள், சாதாரண தினசரி கூலித் தொழிலாளர்கள் (இவர்களில் பலரும் சிறிய கடைகள், ஹோட்டல்கள், சிறிய அளவிலான தொழில்கள்) ஆவர். இவர்களில் பலருக்கும் சம்பளம் குறைவும். இது இப்படியெனில் பலருக்கு மீண்டும் வேலை வாய்ப்புகளே கிடைக்கவில்லை. பலரும் கடன் பெற்று தான் நகரங்களுக்கு திரும்பியுள்ளனர். ஆக தங்கள் கடனை எப்படியேனும் திரும்ப செலுத்த வேண்டும் என நகரங்களுக்கு திரும்பியவர்கள், மீண்டும் தங்களது சொந்த கிராமங்களுக்கு செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர்.
பல பிரச்சனைகள்
கடந்த ஆண்டு சொந்த ஊருக்கு செல்ல வாங்கிய கடனை திரும்ப செலுத்துவதற்காக வேலைக்கு திரும்பிய நிலையில், தற்போது மீண்டும் சொந்த ஊர்களுக்கு திரும்ப வேண்டுமோ என்ற கவலையும் எழுந்துள்ளது. நகரத்திலேயே இருந்து ஏதேனும் கிடைத்த வேலையினை செய்யலாம் எனினும், சம்பளம் குறைவு, வாடகை விகிதம் அதிகம். இப்படி அனைத்துமே புலம் பெயர் தொழிலாளர்களுக்கு பிரச்சனையாகத் தான் உள்ளது.
அது வேறு? இது வேறு?
கடந்த ஆண்டில் கொரோனா பற்றிய பயம் மக்கள் மனதில் இல்லை. ஆனால் தற்போது அதுவே மக்களை பாடாய்படுத்திக் கொண்டுள்ளது. அந்த பயமும் மனதில் உள்ளது. எனினும் இந்த முறை கடந்த ஆண்டை போல் அல்லாமல் மக்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாய் இருக்கின்றனர். இதுவே மக்கள் அங்கும் இங்கும் அலைமோதுவதற்கு சாட்சி.
உதவி கிடைக்குமா?
பெரும்பாலான மாநிலங்களில் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு என உதவும் ஹெல்ப்லைன் என தனியாக இல்லை. அப்படியே அவர்கள் சென்றாலும் சரியான உணவு, இருப்பிடம், தனிமைப்படுத்த தேவையான வசதிகள் என எதுவும் இல்லை. ஆக இவர்களுக்கென சரியான உணவு, சுகாதார சேவை வசதிகளும் சரியாக இல்லை.
அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஆக அரசு புலம்பெயர் தொழிலாளர்களின் பயணத்தினை எளிதாக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நிறுவன உரிமையாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்க வேண்டும். இந்த தொழிலாளர்களுக்கு ரேஷன் மூலம் இலவச பொருட்களை வழங்க வேண்டும். இது தங்கள் சொந்த ஊர் செல்ல நினைப்பவர்கள், தொடர்ந்து நகரங்களிலேயே இருப்பவர்கள் என அனைவருக்கும் இந்த உதவிகள் செய்யப்பட வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக இலவச சுகாதார சோதனைகள் நடத்தப்பட வேண்டும்.
பலரின் வேண்டுகோள்
குறிப்பாக சுகாதார அமைப்புகளுடன் கோவிட் பராமரிப்பு மையங்களை தொடங்க வேண்டும். அதில் குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகள் என அனைவருக்கும் உதவி செய்ய வேண்டும். உத்தரவாதம் அளிக்கப்பட்ட வேலை நாட்களை 100 நாட்களில் இருந்து, 200 நாட்களாக அதிகரிக்க வேண்டும். மொத்தத்தில் கடந்த ஆண்டு மோசமான நிலை அரங்கேறுதல் கூடாது என்பதே பலரின் வேண்டுகோளாக உள்ளது.