ஏங்க, FD-ங்குறது என்ன ஷேர் மார்க்கெட்ட, லாபம் பாக்குறதுக்கு. அது வங்கிகள் சொல்ற திட்டமுங்க. அதுல என்னத்த வருமானம் ஈட்ட முடியும். போய் காச போட்டுட்டு, குறிப்பிட்ட காலத்துக்கு அப்புறமா காச எடுத்தா 7.5 - 8 % வட்டி கிடைக்கும் அவ்வளவு தான என அப்பாவியாகக் கேட்டால்.... மேற்கொண்ட படிங்க.
எனக்கு பத்தாது
கடந்த சில ஆண்டுகளாக வட்டி விகிதங்கள் தொடர்ந்து கொஞ்சம் குறைந்து கொஞ்சம் அதிகரித்து என விளையாட்டு காண்பித்துக் கொண்டு இருக்கிறது. இந்த விளையாட்டு எல்லாம் வேண்டாம், எனக்கு வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்கிற ரீதியில் நல்ல லாபம் வேண்டும் என்றால் பங்குச் சந்தைகள், மியூச்சுவல் ஃபண்டுகள் தான் ஒரே வழி.
அய்யோ ரிஸ்கா..?
தம்பி நமக்கு இந்த ஷேர் மார்க்கெட் பக்கம் எல்லாம் மழைக்கு கூட ஒதுங்குனது இல்ல. ஆக நம்மலும் எங்கெயாச்சும் காச போட்டு வருமானம் பாக்கணும், இந்த ரிஸ்கு எல்லாம் இருக்கக் கூடாது என நினைத்தால்... உங்களின் டார்லிங் இன்வெஸ்ட்மென்ட் FD தான். இப்போது இந்த FD-யில் எப்படி அதிக வருமானம் பெறுவது எனப் பார்ப்போம்.
ஆன்லைனில் FD
ஆன்லைன் மூலம் கணக்கைத் தொடங்கி நிலையான வைப்புத்தொகையை செலுத்துவதன் மூலம், வட்டி விகிதம் கொஞ்சம் அதிகமாகக் கிடைக்கும். உதாரணத்துக்கு மஹிந்திரா பைனான்ஸ் நிறுவனத்தில் ஆன்லைன் மூலம் வைப்புத்தொகை செலுத்துவதன் மூலம், 9 சதவீதம் வட்டி கிடைக்கிறது.
அதேநேரம் மெனக்கெட்டு நேரடியாக வங்கிக்கு சென்று வைப்புத்தொகை செலுத்தினால் 8.75 சதவிகிதம் தான் வட்டி. 12 முதல் 24 மாத கால அளவுக்கான நிரந்தர வைப்புத்தொகைக்கு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி 7.5 சதவீத வட்டிதான் அளிக்கிறது. இப்ப லாபம் 100 ரூபாய்க்கு 1.50 ரூபாய் லாபம்யா.
நிறுவனங்களில் முதலீடு
வங்கி வைப்புத் தொகையில் பெறும் வட்டி விழுக்காட்டை விட, தர மதிப்புச் சான்று பெற்றுள்ள நிறுவனங்களின் கார்ப்பரேட் டெபாசிட்டுகளில் செலுத்தும் வைப்புத் தொகை திட்டங்களுக்கு அதிக அளவில் வட்டி வழங்கப்படுகிறது. பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ யில், வெறும் 7.5 சதவிகிதம் தான் வட்டி தருகிறார்கள். ஆனால் பஜாஜ் பின்செர்வின் கார்ப்பரேட் டெபாசிட்களுக்கு 8.75 வட்டி வழங்குகிறார்கள். மஹிந்திரா பைனான்ஸை எடுத்துக் கொண்டால் வைப்புத் தொகைகளுக்கு வட்டி விகிதம் 9 சதவீதமாக அதிகரிக்கிறது.
15 G மற்றும் 15 h
வருமானத்தில் வரிக்கழிவு (டிடிஎஸ் / TDS) செய்யப்படுவதாக உணர்ந்தால், மேலே குறிப்பிட்டுள்ள படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும். இது வரிக்குறைப்பை தவிர்த்துக்கொள்ள முடியும் என்பதோடு, வருவாய் அதிகரிக்கும் வாய்ப்பையும் உருவாக்கித் தருகிறது. வருமான வரி வரம்பான 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக நம் வருமானம் இருந்தால் மட்டுமே 15 ஜி, 15 எச் படிவங்களை வங்கிகளில் தாக்கல் செய்ய வேண்டும். வருவாய் குறைவாக இருப்பதால் ஊதியத்தில் வரிக்கழிவு செய்யக்கூடாது என்பதை உணர்த்துவதற்காக இந்த படிவங்கள் சமர்பிக்கப்படுகிறது. ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் வருபவர்கள் இந்த படிவத்தை சமர்பிக்கக் கூடாது.
கூட்டு வட்டி கணக்கு
FD-களில் cumulative deposits என ஒரு ரகம் உண்டு. இந்த ரக டெபாசிட்களில் கிடைக்கும் வட்டிக்கும், சேர்த்து அடுத்த முறை வட்டி கணக்கிடப்படும். உதாரணமாக ஜனவரி மாதம் இந்த cumulative deposit-ல் 1,00,000 ரூபாய் முதலீடு செய்கிறீர்கள், ஆண்டுக்கு 8% வட்டி. வட்டி வருமானம் மாதாமாதம் கிடைக்கும் என்றால் பிப்ரவரி மாதம் 666.67 ரூபாய் கிடைக்கும். ஆக பிப்ரவரி மாதம் அசல் 1,00,000 + வட்டி 666.67 சேர்த்து 100666.67 ரூபாய்க்கு மார்ச் மாதம் வட்டி கிடைக்கும். இந்த முறையில் அறிவித்திருக்கும் வட்டியை விட குறைந்த பட்சம் 0.20 % வட்டி கூடுதலாகக் கிடைக்கும்.
எதுக்கு எடுக்குறீங்க
நிலையான வைப்புத்தொகை திட்டத்தில் பெரிய பிரச்னை, பணத்தை திருப்பி எடுப்பது தான். முதிர்வு காலம் முடிவதற்குள் திரும்பப் பெறும் தொகைக்கு வங்கிகளுக்கு 1 சதவீதம் கட்டணம் விதிக்கின்றன. ஆகையால் அவசரத் தேவைக்காக நிரந்தர வைப்புத் தொகையில் கைவைத்தால், பையை கடிக்கும். வந்த வட்டி வருமானத்தில் நஷ்டம் ஏற்படும். ஆக பணத்தையும் பெருக விட வேண்டும், தேவையான போது எடுக்கவும் வேண்டும்... என செய்யலாம்.
பிரிச்சிப் போடு
உதாரணமாக 10 லட்சம் ரூபாய் உங்களிடம் இருக்கிறது. அதை அப்படியே ஒரு FD-ஆக போடுகிறீர்கள் என்றால், தேவையான போது மொத்த தொகையையும் எடுக்க வேண்டி இருக்கும். ஆக 5 லட்சமாக இரண்டு டெபாசிட் அல்லது 1 லட்சமாக 10 டெபாசிட் என பிரித்து முதலீடு செய்யுங்கள். தேவையான பணத்தை எடுக்கும் போது மீதத் தொகைக்கு வட்டி வரட்டுமே.
பெற்றோரைப் பயன்படுத்து
பெற்றோர்கள் மூத்த குடிமக்களாக இருந்தால், நிலையான வைப்புத் தொகை திட்டத்தில் கூடுதலாக 0.50 சதவீதம் வட்டி கிடைக்கும். அவர்கள் வரி வரம்புக்குள் இல்லாதவர்களாக இருந்தால் டபுள் சந்தோஷம் தான். 1. கூடுதல் வட்டி. 2. வந்த வட்டி வருமானத்துக்கு வரி கட்டத் தேவை இல்லை.
இதெல்லம் செய்தால் கூறையை பிச்சிக்கிட்டு வருமானம் வருமா எனக் கேட்டால் நோ ஸார். குறைந்தபட்சம் ஏற்படும் நஷ்டம் தவிர்க்கப்படும்.