சென்னை: பெரும்பாலும் நெருக்கடியான நேரங்களில் மட்டுமே அதிகமான பணம் தேவைப்படும். அந்த நேரங்களில் மிக விரைவாக வங்கிகளிடமிருந்து கடன் வாங்க முடியாது. இருக்கும் பங்குகளையும் விற்க முடியாது. ஆனால் பங்குகளை வைத்து கடன் பெறலாம். அதனால் பங்குகளை குறைந்த விலைக்கு விற்க தேவையில்லை. அதன் மூலம் நெருக்கடியான சூழலை மிகச் சிறப்பாக கையாள முடியும்.
(5 reasons why your loan could be rejected)
பங்குகளின் மீது எவ்வாறு கடன் பெறுவது?
முதலில் வங்கியில் நாம் வைத்திருக்கும் பங்குகளை சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பித்தவுடன், தேவையான கடன் தொகை நமது நடப்புக் கணக்கில் வங்கியால் டெபாசிட் செய்யப்படும். பின் நமக்குத் தேவையான தொகையை எடுத்துக் கொள்ளலாம். நாம் எடுக்கும் தொகைக்கு மட்டுமே வட்டி விதிக்கப்படும். மேலும் மிகவும் முக்கியமான அவசியத் தேவைகள் இருந்தால் மட்டுமே பங்குகள் மீது கடன் வாங்க வேண்டும். மேலும் கடன் வாங்கும் போதே, அந்த கடனுக்குரிய வட்டி மற்றும் அவற்றைத் திருப்பிச் செலுத்த வேண்டிய முறைகள் ஆகியவற்றை நன்றாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். வங்கியிலிருந்து பங்குகளின் மீது கடனைப் பெற்ற பிறகு அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லையானால் அந்த பங்குகளை விற்பதற்கு வங்கிக்கு சட்ட ரீதியாக முழு அதிகாரம் உண்டு.
பாதுகாப்பு அட்டவணை
நாம் வைத்திருக்கும் ஒவ்வொரு பங்குக்கும் கடன் பெற முடியாது. பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பு அட்டவணைக்குள் வரும் பங்குகளுக்கு மட்டுமே கடன் கிடைக்கும். எடுத்துக்காட்டாக ஐடிபிஐ வங்கி, பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட, 465 பாதுகாப்பு அட்டவணைக்குள் வரும் பங்குகளுக்கு மட்டுமே கடன் வழங்குகிறது.
கடன் மதிப்பு
பங்குகளின் மீது கடன் வழங்குவது வங்கிகளுக்கு வங்கிகள் வேறுபடுகின்றன. தற்போது உள்ள நடைமுறையைப் பார்த்தால், நாம் வைத்திருக்கும் பங்குகளின் மதிப்பிலிருந்து 50 சதவீதம் கடன் வழங்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக நாம் ரூ.30 லட்சம் மதிப்பிலான பங்குகளை வைத்திருந்தால், அந்த பங்குகளுக்கு ரூ.15 லட்சம் கடன் கிடைக்கும். எனவே பங்குகள் மீது கடன் வாங்கி, நமது நெருக்கடியான பணச் சூழலை சுமூகமாக தீர்த்துக் கொள்ளலாம்.