இந்தியாவில் வராக்கடன் எனப்படும் பேட் லோன் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து ஜூன் மாதத்தில் வரலாறு காணாத உயர்வை அடைந்துள்ளது.
2017 ஜூன் மாதத்தின் முடிவில் நாட்டின் வராக் கடன் அளவு 9.5 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என ரிசர்வ் வங்கி வெளியிடாத அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக ரெயூட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
திடீர் உயர்வு
இந்திய வங்கிகளில் செயல்படாத சொத்துக்கள், மறுசீரமைப்புச் செய்யப்பட்ட கடன்கள் என அனைத்தும் வராக்கடன் கீழ் வரும். 2017ஆம் ஆண்டில் ஜூன் மாத முடிவு வரையிலான காலத்தில் இதன் அளவு 4.5 சதவீதம் வரையில் உயர்ந்து காணப்படுகிறது.
9.5 லட்சம் கோடி
மேலும் நடப்பு ஆண்டின் மார்ச் மாதத்தில் நாட்டின் மொத்த வராக் கடன் அளவு 7.7 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிலையில் ஜூன் மாதத்தில் 9.5 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
உலக வங்கி
2016ஆம் ஆண்டு உலக வங்கியின் அறிக்கைப்படி நாட்டின் வராக்கடன் அளவு மொத்த கடன் அளவுகளில் 9.2 சதவீதம் வராக்கடனாக உள்ளது.
ஆசியாவில் பாகிஸ்தான் 11.3 சதவீத்துடன் முதல் இடத்தில் இருக்கும் நிலையில் அதிக வராக்கடன் வைத்துள்ள நாடுகளில் இந்தியா 9.2 சதவீதத்துடன் 2வது இடத்தைப் பிடித்துள்ளது.
2011 முதல் 2016 வரையில்
2011ஆம் ஆண்டில் மொத்த கடனில் இந்திய வங்கிகளின் வராக்கடன் அளவு வெறும் 2.67 சதவீதமாக மட்டுமே இருந்த நிலையில் 2015ஆம் ஆண்டு இது 5.88 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது 2016ஆம் ஆண்டில் 9.18 சதவீதமாக அதிகரித்து அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
முக்கியத் துறையில்
இந்தியாவின் வராக் கடன் அதிகம் வைத்துள்ள துறைகள் பவர், ஸ்டீல், சாலை கட்டமைப்பு மற்றும் டெக்ஸ்டைல் துறை சார்ந்த நிறுவனங்கள் தான் என ஆய்வுகள் கூறுகிறது.