இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வர்த்தகக் குழுமமாக விளங்கும் அதானி குழுமம் பல துறைகள் சார்ந்த வர்த்தகத்தைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு வரும் நிலையில், தற்போது மும்பையின் முக்கியமான பகுதியில் முக்கியமான ரியல் எஸ்டேட் முதலீட்டை செய்துள்ளது.
இந்த மாதம் நடக்க இருக்கும் 5ஜி ஸ்பெக்ட்ரத்திற்கான ஏலத்தில் திடீர் அறிவிப்பாக அதானி குழுமம் கலந்துகொள்வது, ஒட்டுமொத்த டெலிகாம் துறைக்கே பெரும் அதிர்ச்சியாக இருக்கும் வேளையில், இதைச் சார்ந்த ஒரு வர்த்தகத்திற்காக அதானி குழுமம் நிலத்தை வாங்கியுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
அதானி குழுமம்
அதானி குழுமம், நவி மும்பையின் ஐரோலி பகுதியில் சுமார் 92 ஏக்கர் நிலத்தை, மும்பையின் முன்னணி ரியல் எஸ்டேட் டெவலப்பர் கே ரஹேஜா கார்ப் நிறுவனத்திடம் இருந்து இரண்டு நில பகுதிகளாகச் சுமார் 1,500 கோடி ரூபாய் தொகைக்குக் கையகப்படுத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
எட்ஜ் கான்னெக்ஸ்
அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு உலகளவில் ஹைப்பர்ஸ்கேல் டேட்டா சென்டர் வழங்குநரான எட்ஜ் கான்னெக்ஸ் (EdgeConneX) இடையேயான கூட்டணியில் உருவாக்கப்பட்ட அதானி கான்னெக்ஸ் நிறுவனத்திற்கு இந்த 92 ஏக்கர் நிலத்தையும் மாற்றப்படுவதாகத் தகவல் கிடைத்துள்ளது.
டேட்டா சென்டர்
பிப்ரவரி 2021 இல், அதானி குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ், இந்தியா முழுவதும் டேட்டா சென்டர்களை உருவாக்கி இயக்குவதற்காக EdgeConneX உடன் 50:50 கூட்டணியில் அதானி கான்னெக்ஸ் நிறுவனத்தை உருவாக்கியது.
சென்னை, மும்பை
அதானி கான்னெக்ஸ் நிறுவனம் தற்போது சென்னை, நவி மும்பை, நொய்டா, விசாகப்பட்டினம் மற்றும் ஹைதராபாத் சந்தைகளில் ஹைப்பர் ஸ்கேல் டேட்டா சென்டர்களின் நெட்வொர்க்கை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருகிறது.
மத்திய அரசு அறிவிப்பு
மத்திய அரசு இந்தியாவில் வர்த்தகம் செய்யும் அனைத்து நிறுவனங்களும் மக்களின் டேட்டா அனைத்தையும் உள்நாட்டிலேயே சேமிக்க வேண்டும் என அறிவித்த நிலையில் நாட்டில் டேட்டா சென்டருக்கான தேவை அதிகரித்துப் பெரும் வர்த்தக வாய்ப்பு உருவானது. இதை கௌதம் அதானியின் அதானி எண்டர்பிரைசர்ஸ் கைப்பற்றியுள்ளது.