கொரோனா வைரஸைப் பற்றி அதிகம் சொல்லத் தேவை இல்லை. விலை மதிப்பில்லாத லட்சக் கணக்கான மக்கள் உயிர், இந்த நோயால் பறி போய் இருக்கிறது. நோயின் தாக்கல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
இந்த கண்ணுக்குத் தெரியாத வைரஸால், பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருளாதார வளர்ச்சிகள் கண் எதிரே சின்னா பின்னமாகிக் கொண்டு இருக்கிறது. இதில் ஐடி துறை மட்டும் விதி விலக்கல்ல.
"சில ஐடி கம்பெனிகளில் 120 நிமிடம் மட்டுமே கால அவகாசம் கொடுத்து ராஜினாமா செய்யச் சொல்கிறார்கள்" ஆயிரக் கணக்கான ஊழியர்கள் வேலை நீக்கம்... என பல ஐடி சார்ண்ட பயமுறுத்தும் செய்திகள் நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாகிக் கொண்டு தான் இருந்தது.
நல்ல செய்தி
ஆனால் அவ்வப் போது சில நல்ல செய்திகளும் ஐடி கம்பெனிகளிடம் இருந்து வந்து கொண்டு தான் இருக்கின்றன. சமீபத்தில் விப்ரோ நிறுவனம், தன் ஊழியர்கள் மட்டுமின்றி, ஒட்டு மொத்த ஐடி துறையில் பணியாற்றும் ஊழியர்களும் மகிழும் விதத்தில் ஒரு நல்ல செய்தியைச் சொல்லி இருக்கிறது.
என்ன செய்தி அது
விப்ரோ நிறுவனத்தின் தலைவராக ரிஷாத் ப்ரேம்ஜி தற்போது பதவியில் இருக்கிறார். சமீபத்தில் விப்ரோ நிறுவனத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டம் நடந்தது. பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ஒருவர், விப்ரோ நிறுவனத்தில் லே ஆஃப் குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது தான் விப்ரோ நிறுவனத்தின் தலைவர் ரிஷாத் ப்ரேம்ஜி விப்ரோவில் லேஆஃப் செய்யவில்லை எனச் சொல்லி இருக்கிறார்.
லே ஆஃப் தொடர்பாக விளக்கம்
விப்ரோ நிறுவனத்தில் கொரோனா வைரஸை காரணம் காட்டி ஒரு ஊழியரைக் கூட லே ஆஃப் செய்யவில்லை. இனி வருங்காலத்திலும் கொரோனா வைரஸைக் காரணம் காட்டி ஊழியர்களை லே ஆஃப் செய்வதற்கான திட்டங்களும் இல்லை" என திட்ட வட்டமாகச் சொல்லி ஐடி ஊழியர்கள் வயிற்றில் பாலை வார்த்து இருக்கிறார்.
வீட்டில் இருந்தே வேலை
விப்ரோ நிறுவனத்தின் பெரும்பாலான ஊழியர்கள், வீட்டில் இருந்த படியே வேலை பார்த்து வருகிறார்கள். விப்ரோ கம்பெனி இனி வரும் காலங்களில் ஒரு புதிய blended model முறைக்கு மாற இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார் ரிஷாத் ப்ரேம்ஜி. அதோடு விப்ரோ நிறுவனம், டிஜிட்டல் மற்றும் க்ளவுட் டெக்னாலஜிகளில் கணிசமான அளவுக்கு முதலீடு செய்து இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார்.
அப்படி என்றால் லாபம்
ஒரு ஊழியராக இருந்து பார்க்கும் போது, விப்ரோ தலைவர் ரிஷாத் ப்ரேம்ஜி சொல்வதை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் ஒரு முதலீட்டாளராக, விப்ரோ நிறுவனத்தின் லாபம் குறைவதை ஏற்றுக் கொள்ள முடியாதே..! அதற்கு ரிஷாத் ப்ரேம்ஜி எதாவது சொல்லி இருக்கிறாரா என்று கேட்கிறீர்களா? விடை இதோ.
மற்ற வழிகளில் கட்டுப்படுத்துவோம்
விப்ரோ நிறுவனத்தின் லாபத்தை அதிகரிக்க, மற்ற வழிகளிலும், மற்ற காரணிகளிலும் செலவுகளைக் கட்டுப்படுத்துவோம் என தெளிவாகச் சொல்லி இருக்கிறார். ரிஷாத் ப்ரேம்ஜி விப்ரோ கம்பெனியின் தலைவராக ஆண்டுப் பொதுக் கூட்டத்தை நடத்துவது இதுவே முதல் முறை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அப்பா அசீம் ப்ரேம்ஜி தற்போது non-executive director and founder chairman ஆக பதவியில் இருக்கிறார்.