ஆன்லைன் சில்லறை வர்த்தகத்தில் மிகப் பெரிய ஜாம்பவான் அமேசான் ஆகும். இந்த நிறுவனத்தின் நிறுவனம் ஜெஃப் பெசோஸ் இந்தியாவில் தங்களது வர்த்தகம் நல்ல முறையில் சென்று கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப் பெரிய தொழில்நுட்பம் மற்றும் ஆன்லைன் சில்லறை வர்த்தகத்தில் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான அமேசான், உலகம் முழுவதும் தனது வர்த்தகத்தை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் குறிப்பாக இந்தியாவில் அமேசான் நிறுவனம் ஆன்லைன் சில்லறை விற்பனையில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அதிக போட்டியை வழங்கிவரும் அமேசான், தொடர்ந்து இந்தியாவில் தனது முதலீடுகளையும் அதிகரித்து வருகிறது.
வர்த்தகம் எப்படி போய்க் கொண்டிருக்கிறது?
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரத்தில் நடைபெற்ற நேஷனல் போர்ட்ரைட் கேலரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், இந்தியாவில் விதிக்கப்படும் டிஜிட்டல் மயம் சார்ந்த விதிமுறைகளாலும் கட்டுப்பாடுகளாலும் அமேசான் நிறுவனத்துக்கு ஏதேனும் பாதிப்பு இருக்கிறதா என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்த ஜெஃப் பெசோஸ் இந்தியாவில் வர்த்தகம் நன்றாக போய்க் கொண்டிருப்பதாக பதிலளித்துள்ளார்.
சிறப்பாக செயல்பட்டு வருகிறது
இந்தியாவில் உள்ள ஒழுங்குமுறைகளின் நிலைத்தன்மை மீது அமேசான் நிறுவனத்துக்கு எப்போதுமே நம்பிக்கை இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் அமேசான் நிறுவனம் சிறப்பாகத் தொழில் புரிந்து வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் அமேசான் நிறுவனத்துக்கான இந்தியப் பிரிவுத் தலைவர் அமித் அகர்வால் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகவும், 20 வருடங்களுக்கு மேல் அவருடன் இணைப்பில் இருப்பதாகவும் ஜெஃப் தெரிவித்துள்ளார்.
போட்டியை சமாளிக்க தொடர்ந்து முதலீடு
ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் போட்டியைச் சமாளிக்க அமேசான் நிறுவனம் ரூ.4,400 கோடிக்கு மேல் முதலீடு செய்திருக்கிறது. இதில் வேடிக்கை என்னவெனி லிந்த நிறுவனம் கடந்த 2018-19ஆம் ஆண்டில் அமேசான் 7,000 கோடி ரூபாய் நஷ்டத்தினை கண்டது தான். இந்தியாவில் 5 பில்லியன் டாலர் வரையில் முதலீடு செய்யத் திட்டமிட்டிருப்பதாக கடந்த 2016ம் ஆண்டில் ஜெஃப் பெசோஸ் கூறியிருந்தார். இந்த நிலையில் அமேசானுக்குப் போட்டியாக ஃபிளிப்கார்ட் நிறுவனமும் முதலீட்டை அதிகரித்து வருவது கவனிக்கதக்கது.
ஜெஃப் பெசோஸ் இந்தியா வருகை
இந்த நிலையில் அமேசான் நிறுவனம் ஜெஃப் பெசோஸ் பிரதமர் நரேந்திரமோடியை சந்திக்க ஜனவரியில் இந்தியா வரலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. உலகின் மிகப்பெரிய ஆன்லைன் சில்லறை விற்பனையாளர் இந்தியாவில் மாறிவரும் மின் வணிக விதிகளைப் பற்றி கவலைப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த வெளிநாட்டு ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராக, இந்திய சில்லறை வணிகர்கள் குழுக்கள் போராட்டங்களுக்கு மத்தியில் பெசோஸ் அழைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.