குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக பதவியேற்று இன்று முதல் 9 வருடங்கள் ஆனது. இந்த 9 வருடத்தில் மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா துவங்கி, பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி அமலாக்கம், கொரோனா தொற்று என பல முக்கியமான மாற்றங்கள் நடந்துள்ளது. இந்த பெரும் மாற்றத்திற்கு மத்தியில் இந்திய பங்குச்சந்தையில் பங்கு முதலீட்டாளர்களின் நிலைமை என்ன..?
நரேந்திர மோடி-யின் 9 வருட ஆட்சி காலத்தில் நிஃப்டி குறியீடு 150 சதவீதமும், சென்செக்ஸ் குறியீடு 300 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது. சென்செக்ஸ் குறியீடு 26 மே 2014ல் 24,716.88 புள்ளிகளில் இருந்து தற்போது 62000 புள்ளிகளை தாண்டியுள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு 7,359.05 புள்ளிகளில் இருந்து 18500 புள்ளிகளை எட்டியுள்ளது.
இதேவேளையில் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகரித்து 195 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. இந்த 9 வருட காலத்தில் 85 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 280 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
மேலும் நரேந்திர மோடி-யின் 9 வருட ஆட்சி காலத்தில் பன்னாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இந்த பங்குச்சந்தையில் சுமார் 49.21 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை செய்துள்ளனர். இதேபோல் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் 7 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளனர். அதிலும் குறிப்பாக கடந்த 3 வருடத்தில் அதிகப்படியான முதலீடுகள் பங்குச்சந்தையில் குவிந்துள்ளது.
கடந்த 9 வருடத்தில் அதிகம் லாபம் கொடுத்த டாப் 10 துறைகளும், எவ்வளவு லாபத்தை கொடுத்துள்ளது என்பதையும் இப்போது பார்ப்போம்.
- நிஃப்டி ஐடி குறியீடு - 219 சதவீதம் உயர்வு
- நிஃப்டி பைனான்சியஸ் சர்வீசஸ் குறியீடு - 216 சதவீதம் உயர்வு
- நிஃப்டி பேங்க் குறியீடு - 190 சதவீதம் உயர்வு
- நிஃப்டி MNC குறியீடு - 186 சதவீதம் உயர்வு
- நிஃப்டி FMCG குறியீடு - 177 சதவீதம் உயர்வு
- நிஃப்டி India consumption குறியீடு - 177 சதவீதம் உயர்வு
- நிஃப்டி சேவை துறை குறியீடு - 170 சதவீதம் உயர்வு
- நிஃப்டி 50 குறியீடு - 149 சதவீதம் உயர்வு
- நிஃப்டி எனர்ஜி குறியீடு - 140 சதவீதம் உயர்வு
- நிஃப்டி ஆட்டோ குறியீடு - 115 சதவீதம் உயர்வு
- நிஃப்டி கமாடிட்டீஸ் குறியீடு - 100 சதவீதம் உயர்வு