டெல்லி: உலக நாடுகளையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கமானது தற்போது இந்தியாவில் மீண்டும் தனது காலடியை எடுத்து வைத்துள்ளது.
Recommended Video
டெல்லி மற்றும் தெலுங்கானவினை சேர்ந்த இருவருக்கு கொடிய வைரஸின் தாக்கம் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது.
இந்த நிலையில் இந்திய பங்கு சந்தைகள் படு வீழ்ச்சி கண்டுள்ளன.
கொரோனாவால் பாதிப்பு
சீனாவில் உள்ள ஹுபே மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், ஆசியா கண்டத்தை கடந்து ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளை அச்சுறுத்தி வருவதுடன் உலகின் பல நாடுகளுக்கு படுவேகமாகப் பரவி வருகிறது. சொல்லப்போனால் பெருமளவிலான உயிரிழப்பையும் ஏற்படுத்தி வருகிறது. அதிலும் இன்றைய நிலவரப்படி இந்த கொடிய வைரஸ் தாக்கத்துக்கு உலகம் முழுவதும் சுமார் 3,000 பேருக்கும் மேல் பலியாகியுள்ள நிலையில், சுமார் 88,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் பாதிப்பு
இந்தியாவை பொறுத்த வரையில் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று, சில மாநிலங்களில் மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டது. முன்னதாக கேரளா மாநிலத்தில் மட்டும் 3 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் புது டெல்லியில் ஒருவரும், தெலுங்கானாவில் ஒருவர் என மேலும் இரு நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு உறுதி செய்துள்ளது.
நலம் தான்
எனினும் அவர்கள் இருவரும் நலமாக இருப்பதாகவும் தீவிர மருத்துவ சிகிச்சை மற்றும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. சீனாவினை போன்ற மிகப்பெரிய பொருளாதார நாடுகளையே ஆட்டிப் படைத்துள்ள கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் மீண்டும் களமிறங்கியுள்ளது சற்று பதற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய சந்தைகள் வீழ்ச்சி
இந்த பதற்றத்தின் காரணமாக மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் இன்று காலை ஏற்றத்தில் தொடங்கிய நிலையில், மத்திய அரசின் அறிவிப்பினால் வர்த்தக முடிவில் சந்தை வீழ்ச்சி கண்டுள்ளது. குறிப்பாக சென்செக்ஸ் முடிவில் 153 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 38,144 ஆக முடிவடைந்துள்ளது. இதே இன்றைய உச்ச விலையிலிருந்து ஒப்பிடும்போது 939 புள்ளிகள் வீழ்ச்சி கண்டுள்ளது. இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 69 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 11,132 ஆக முடிவடைந்துள்ளது.
இந்திய ரூபாயும் வீழ்ச்சி
அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 0.33% வீழ்ச்சி கண்டு 72.45 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. இதன் காரணமாகவும், கொரோனா பீதியிலும் சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள அனைத்து இண்டெக்ஸ்களும், நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து இண்டெக்ஸ்களும் வீழ்ச்சி கண்டுள்ளன.
நிஃப்டி இண்டெக்ஸில் பங்கு வீழ்ச்சி
எஸ்ஸெல் ப்ரோபேக் லிமிடெட், ஐனாக்ஸ் லெயிஷர், வோடபோன் ஐடியா லிமிடெட், பிவிஆர் லிமிடெட், ஸ்பைஸ்ஜெட், ரால்லீஸ் இந்தியா, யெஸ் பேங்க் லிமிடெட், வெல்ஸ்பன் கார்ப் லிமிடெட், எல்கி எக்கியூப்மென்ட்ஸ், ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் உள்ளிட்ட டாப் 10 பங்குகள் வீழ்ச்சி கண்டுள்ளன.