கொரோனா வைரஸ் வந்ததில் இருந்தே, சீனா அதிக அளவில் லைம் லைட்டுக்கு வந்து கொண்டே இருக்கிறது.
சீனாவால் தான், உலகமே, லாக் டவுன் போன்ற பெரிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வந்தது என ட்ரம்ப் தொடங்கி பல அரசியல்வாதிகளும் சீனாவை குற்றவாளிக் கூண்டில் ஏற்றிக் கொண்டே இருக்கிறார்கள்.
ஆனால் சீனா இதற்கு எல்லாம் மசிவதாகத் தெரியவில்லை. எல்லா குற்றச்சாட்டுகள் மற்றும் புகார்களையும், இடது கையால் ஒதுக்கிவிட்டு, அடுத்த வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறது.
சர்வதேச அமைப்பு
ஆனால் சர்வதேச நாடுகளோ, சீனாவை தன் போக்கில் விடுவதற்கும் தயாராக இல்லை. சீனாவின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தவும், சீனாவில் நடக்கும் மோசடிகளை வெளியே கொண்டு வரவும் பல நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட, ஒரு கூட்டுக் குழுவை அமைத்து இருக்கிறார்கள்.
முதல் முறை
கொரோனா பிரச்சனை மற்றும் ஹாங்காங் பிரச்சனை போன்ற விஷயங்களில், சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற நோக்கில் முதல் முறையாக பல கண்டத்தைச் சேர்ந்த, அமெரிக்கா, ஐரோப்பா, இங்கிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா, நார்வே, ஸ்வீடன்... என பல நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து ஒரு Inter Parliamentary Alliance on China (IPAC) குழுவை அமைத்து இருக்கிறார்களாம்.
ஏன் இந்த IPAC
மேலே சொன்னது போல, பல நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட இந்த IPAC குழு, சர்வதேச விதிமுறைகளை பாதுகாப்பது, மனித உரிமைகளை உறுதி செய்வது, வணிகத்தில் நேர்மையை மேம்படுத்துவது, பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உதவுவது, தேசங்களுக்கு இடையிலான ஒற்றுமையை பாதுகாப்பது போன்றவைகளை நோக்கமாகக் கொண்டு இருக்கிறதாம்.
IPAC தரப்பு
கடந்த வெள்ளிக்கிழமை இந்த IPAC குழுவை அறிவித்த பின், அதில் ஒரு உறுப்பினராக இருக்கும் Bütikofer "சர்வதேச சட்ட திட்டங்களை (International Order) மாற்றும் வகையில், சீனாவில் மனித உரிமைகள் பிரச்சனை இருக்கிறது. கடந்த காலம் நமக்கு உணர்த்துவது ஒன்று தான், எந்த ஒரு நாடும், தனி ஒருவனாக, சர்வதேச விதிமுறைகளைப் பாதுகாக்க முடியாது" எனச் சொல்லி இருக்கிறது IPAC.
சீனா ஒரு உலக சவால்
"சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் இருக்கும் சீனா, உலகத்துக்கு ஒரு சவாலாகத் திகழ்கிறது. ஜனநாயகம் தான் நம்மை சுதந்திரத்தோடும் பாதுகாப்போடும் வைத்திருக்கிறது. அது இப்போது பெரிய அழுத்தத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இதை கண்டு கொள்ளாமல் இருக்க முடியாது" என IPAC குழுவே ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். சரி இந்த குழுவில் இருப்பவர்கள் எல்லாம் எப்படிப்பட்டவர்கள்..?
2019-ல் சட்டம்
இந்த IPAC குழுவில் இடம் பெற்று இருக்கும் அமெரிக்காவின் மார்கோ ரூபியோ (Marco Rubio) and ராபர்ட் மெனன்டஸ் (Robert Menendez) ஆகியோர் கடந்த 2019-ம் ஆண்டே சீனாவுக்கு எதிராக ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். Uyghurs இன மக்கள் பிரச்சனையை முன்னிட்டு, சீன அதிகாரிகள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கும் சட்டம் அது. இந்த சீன அதிகாரிகள் மீதான கட்டுப்பாடு சட்டம் ட்ரம்பின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறதாம். அப்படி என்றால் இவர்களுக்கு சீனா மீது எப்படிப்பட்ட பார்வை இருக்கும் என யோசித்துக் கொள்ளுங்கள்.
நறுக் கேள்வி
உலகத்தை மாற்றி அமைக்க சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாம் என்ன பதில் சொல்லப் போகிறோம் என்பது தான் நம் காலத்தின் மிக முக்கிய வெளிநாட்டுக் கொள்கை தொடர்பான கேள்வியாக இருக்கும். இந்த சவால், எந்த ஒரு தனி நாடு, நிர்வாகம் மற்றும் அரசியல் கட்சியை விடவும் மிகப் பெரியது என்கிறார் அமெரிக்காவின் மார்கோ ரூபியோ.
மனித உரிமை தரப்பு
ஜெர்மனி நாடு சார்பாக, மைக்கேல் பிராண்ட் என்பவர் இந்த IPAC குழுவில் இருக்கிறார். இவர், ஜெர்மனி சாஞ்சிலர் ஏஞ்சலா மெர்கிலின், Christian Democratic Union கட்சியின் மனித உரிமை பேச்சாளர் (Spokesperson). சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் ஒரு சமநிலையான கொள்கை வேண்டும் என ஜெர்மனியின் சான்சிலர் ஏஞ்சலா மெர்க்கல் விரும்புகிறார். ஆகையால் ஜெர்மனி இவரை களம் இறக்கி இருக்கிறது போல. சரி இதற்கு எல்லாம் சீனா என்ன சொல்கிறது..?
சீனா பதில்
"இந்த பணிப் போர் மனப்பான்மையை கைவிடுங்கள். அதோடு முன் முடிவுகளையும் கைவிடுங்கள். பல்வேறு பிரச்சனைகளைப் பயன்படுத்தி, சினாவின் உள் விவகாரத்தில் தலையிடுவதை நிறுத்துங்கள். உங்கள் நன்மைக்காக அரசியல் திரிபுகளில் ஈடுபடுவதை நிறுத்துங்கள். IPAC குழுவினர், இன்னும் பல நல்ல வழிகளில் சர்வதேச ஒற்றுமைக்கு வழி வகுக்கலாம் என நாங்கள் நம்புகிறோம்" என காரசாரமாக பதில் கொடுத்து இருக்கிறது சீனா.